கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக சூரியனைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட யுலிஸ்ஸிஸ் என்ற விண்கலம் வரும் ஜூன் 30-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருக்கிறது. இந்த விண்கலம் ஐரோப்பிய விண்ணாய்வுக் கழகமான ESA-வும், அமெரிக்க விண்ணாய்வுக் கழகமான NASA-வும் இணைந்து உருவாக்கி விண்ணில் செலுத்தியதாகும். இதன் 18 ஆண்டுகள் ஆயுள், முதலில் திட்டமிடப்பட்டதை விட நான்கு முறை நீட்டிக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டு ஜூலையுடன் இதன் ஆயுள் மொத்தமாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில பூஸ்டர் ராக்கெட்களின் சீரமைப்பால் மேலும் ஓராண்டு இதன் ஆயுள் நீட்டிக்கப்பட்டது. இதன் மின்கலன்கள் தற்போது மிகவும் பழுதடைந்து சீரமைக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றன.
இந்த விண்கலனில் மூலம் தான் சூரியப் புயல்களைக் குறித்தத் துல்லியமான தரவுகள் மனித இனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவான சூரியப் புயல் கடந்த ஆண்டு தான் வீசியது என இக்கலனின் மூலம் தான் நாம் அறிந்து கொள்ள இயன்றது.
வரும் ஜூன் 30 அன்று கிரீன்விச் நேரம் 2120க்கு இக்கலனுடனான கடைசித் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் என்றும், அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு இக்கலன் அப்படியே விண்ணில் திரிய விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




