தன் உடலில் இரு இதயங்களைச் சுமந்து வந்த 16 வயதுப் பெண் ஒருவர் தனது இதயம் சீரடைந்ததைத் தொடர்ந்து கொடையாளரின் இதயம் நீக்கப்பட்டு தன் சொந்த இதயத்துடன் நலமாக இருக்கிறார். வெற்றிகரமான மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்பெண் 14 ஆண்டுகளாகத் தன் உடலில் இருந்த கொடையாளர் இதயத்தின் உதவி இல்லாமல் நலமுடன் இருக்கிறார்.
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹனா கிளார்க்.
இவர் இருவயதுக் குழந்தையாக இருந்தபோது இவரது இதயம் இயல்பைவிட இருமடங்கு பெரிதாக இருந்தது; இதனால் ஓராண்டுக்குள் செயலிழந்துவிடும் அபயாத்தில் அது இருந்தது. இவரது உயிரைக் காக்கக் கொடையாளர் ஒருவரின் இதயத்தை ஹனாவின் உடலுக்குள் பொருத்தி அவரது சொந்த இதயத்தை ஓய்வெடுக்கச் செய்தனர். இதனால் அவரது சொந்த இதயம் விரைவில் களைப்படைந்து போகாமல் காக்கப்பட்டது.
தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்த இதயம் நல்ல நிலையில் இருப்பதால், கொடையாளி வழங்கிய இதயம் நீக்கப்பட்டு தன் சொந்த இதயத்தில் உயிர்வாழ்ந்து வருகிறார். இது மருத்துவ உலகின் ஆச்சரியம் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஓருடல் ஈரிதயம் எனக் கவிதைகளில் தான் கேட்டிருக்கிறோம். அவ்வரிக்கு இப்படியும் பொருள் இருப்பது உண்மையில் வியப்பு தானே?

| < முந்தையது | அடுத்தது > |
|---|




