கொல்கத்தாவைச் சார்ந்த 86வயது கோகுல் சட்டோபாத்யாய் என்ற மூதாட்டிக்கு இளம்வயதிலேயே திருமணம் நடந்து விட்டதால் பள்ளிமேற்படிப்பைத் தொடர முடியவில்லை. எனினும் தனது 86ஆவது வயதில் கொல்கத்தா சவுத் சிட்டி கல்லூரியில் பி.ஏ. இளங்கலை பகுதி-1 தேர்வெழுதப் போகிறார். தெற்கு கொல்கத்தா காகுலியா சாலையில் வசிக்கும் கோகுல் சட்டோபாத்யாய் நேதாஜி நகர் பெண்கள் கல்லூரியில் தேர்வெழுத சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ளார்.
"எங்கள் கல்லூரிக்குத் தேர்வெழுத வந்திருக்கும் இப்பெண்மணியைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. ஏனைய மாணவிகளைப் போன்றே இம்மூதாட்டியும் முனைப்புடன் தேர்வெழுதுகிறார்" என்றார் கல்லூரி அலுவலர் சுதின் பானர்ஜி.
கல்லூரி நிர்வாகம் கோகுல் சட்டோபாத்யாயின் முதுமையைக் கருத்தில் கொண்டு தேர்வறையை இரண்டாவது தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு மாற்றியுள்ளனர். கோகுல் சட்டோபாத்யாய் வினாக்களுக்கு தளராது, நிதானமாக விடையெழுதி அசத்துவதாக சகமாணவிகள் சிலாகிக்கிறார்கள்.
சவுத்சிட்டி கல்லூரியில் படிக்கும் இதர மாணவிகளைப் போல் வழக்கமாகக் கல்லூரிக்குச் சென்று வருவதாகவும் மேற்படிப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதியைப் பெற்று தேர்வெழுதுவதாகவும் கோகுல் சட்டோபாத்யாய் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனது 56 வயதில் கணவனை இழந்த இம்மூதாட்டி முப்பது வருடங்களுக்குப் பிறகும் இளவயதில் கொண்டிருந்த மேற்படிப்பின் மீதான ஆர்வத்தைக் கைவிடாமல் தேர்வெழுத வந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது!

| < முந்தையது |
|---|




