இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை அடுத்து அதுதொடர்பான பல்வேறு நம்பிக்கைகள், புரளிகளும் கூடவே வந்தன. ஒரு புறம் மக்கள் பிர்லா கோளரங்கம் போன்ற இடங்களுக்குச் சென்று கிரகணத்தை விஞ்ஞான ரீதியில் எதிர்கொண்டாலும் மறுபுறம் மக்கள் கோவில்கள், மசூதிகள் என ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டனர்.
வழக்கமாக 4 மணிக்குத் திறக்கப் படும் கோயில்கள் காலை 8 மணிக்குப் பிறகே திறக்கப் பட்டன. பழனி, திருப்பதி போன்ற புகழ்பெற்ற கோயில்கள் முன் மக்கள் திரண்டிருந்தனர். 8 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின் கிரகணத்திற்கான பரிகாரங்கள் மேற்கொள்ளப் பட்டதாக பக்தர்கள் கூறினர்.
தனியார் அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் நவதானியங்களால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சென்னை மெரீனா கடற்கரையில் கரைத்தனர்.
கிரகணத்தின் போது எதுவும் சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாய் திராவிடர் கழகத்தினர் இலவச விருந்துகளுக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்திருந்தனர்.
சூரிய கிரகணத்தன்று காஸ்மோ கதிர் வீச்சால் மொபைல் போன்கள் பாதிக்கப்படும் என்ற குறுந்தகவல் மொபைல் உபயோகிப்பாளர்களைப் பாடாய் படுத்தியது. மொபைல் நிறுவனத்தினர் அவசர அவசரமாய் இந்த குறுந்தகவல் செய்தியை மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சூரிய கிரகணம் நடைபெறும் நேரத்தில் விமானங்களை ஓட்டும் விமானிகளின் கண்கள் பாதிக்கப்படும் என்றும் புரளிகள் கிளப்பி விடப்பட்டன.
பீகாரில் உள்ள தரேகானா என்ற இடத்தில் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, வெளிநாட்டினர் உள்பட பலர் இந்த கிராமத்திற்குப் படையெடுத்தனர். இந்த கிராமத்தில் சூரியனுக்குக் கோயில் ஒன்றும் உள்ளதாம்.
சூரிய கிரகணத்தைப் பார்த்த பின்னர் புனித நீராடுதல் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், உத்திரப்பிரதேசம் வாரணாசியில் புனித நீராடினர். ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் நீராடியதால் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
சூரிய கிரகணத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பள்ளிகளின் நேரம் தள்ளி வைக்கப் பட்டது. சில இடங்களில் அரை மணி நேரமும் சில இடங்களில் ஒரு மணி நேரமும் பள்ளிகள் தாமதமாகத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரிய கிரகணத்தை மக்கள் பார்ப்பதற்கு வசதியாய் சிறப்பு கண்ணாடிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கியது. அதிக அளவிலான மக்கள் சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் கோவளம் கடற்கரையில் திரண்டனர். அதிகமானோர் தங்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று கிரகணத்தை கண்டனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




