நம் சூரியனைத் தவிர விண்ணில் இருக்கும் பல விண்மீன்கள் தத்தம் கதிரியக்கத்தால் பல்வேறு விதமான இயற்கை நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றுள் சூரியனை விட எட்டுமடங்கு பெரிய விண்மீன் ஒன்று தனது இறுதிக்காலத்தில் ஒளிரும் பல வாயுக்கள் அடங்கிய கலவையை உமிழ்வதால் அது வண்ணமயமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு ஒரு பிரமாண்ட சோப்புக் குமிழ் போல இது தெரிகிறது.
"சிக்னஸ் பபிள்" என இது முதலில் அழைக்கப்பட்டாலும், இதற்கு "PN G75.5+1.7" என அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. விண்ணில் இது போல சமச்சீரான கோள வடிவிலான குமிழ்களைக் கான்பது அரிது. இது போன்ற "நெபுலா"க்கள் நீள்வட்ட வடிவிலோ, ஒழுங்கற்ற குமிழ வடிவிலோ, சுருட்டு வடிவிலோ தான் இருக்கும்.
இந்த நெபுலா இதுவரை கண்டுகொள்ளப்படாதது இதன் ஒளிர்வுத் திறன் மிகக் குறைவாக இருந்ததால் தான் என அறிவியலார்கள் கூறியுள்ளனர். இந்தக் கோளம் இது போலக் கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.
விண்ணில் நாம் காண்பது அனைத்தும் பொதுவாகக் கடந்த காலமே. அதாவது நமக்கு மிக அருகிலுள்ள சூரிய இயக்கமும் கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் தாமதமாகத் தான் நம் புவியை வந்தடைகின்றன எனில், பல்லாயிரக் கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் நாம் தற்போது கண்ணுறும் விண்ணியல் நிகழ்வுகள் எப்போதோ நடந்தவை என்பதை அறியும் போது வியப்பு மேலிடுகிறது அல்லவா?

| < முந்தையது | அடுத்தது > |
|---|




