பன்றிக் காய்ச்சல் தற்போது உலகின் 160 நாடுகளுக்குப் பரவி விட்டதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதோடு, இதுவரை இந்தக் காய்ச்சல் பெருமளவு பரவி விட்டாலும், நாம் இதுவரை அதன் உக்கிரத்தைப் பார்க்கவில்லை என்றும், இன்னும் மோசமான விளைவுகள் காத்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் உயர் அலுவலர் கெய்ஜி ஃபுக்காடா என்பார், பன்றிக் காய்ச்சல் உலகளாவியக் கொள்ளை நோய் என அறிவிக்கப்பட்டு மாதங்கள் மூன்று கடந்துவிட்டாலும், இதுவரை அதன் உக்கிரத்தை நாம் காணவில்லை என்று கூறினார். இதுவரை கண்டது அதன் சிறு நுனி மட்டுமே; இனி தான் இருக்கிறது அதன் ஆட்டமே! என்றும் கூறியுள்ளார்.
இதுவரை 800 மக்களை இநோய் பலி கொண்டுள்ளது. இதுவரை ஒருசில மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் 2 பில்லியன் மக்கள் வரை இந்நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். இந்நோய்க்குத் தடுப்பூசி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தாலும், அது நிலைப்படுத்தப்பட பல காலம் பிடிக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.
நோய்வாய்ப் பட்டிருப்போரில் பதின்ம வயதினர் இந்நோய்க்கு எளிய இலக்காகி வருவதாகவும், பெண்களில் கருவுற்றிருப்போரை இந்நோய் குறிவைப்பதாகவும் தரவுகள் தெரிவிப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




