தனது 16 நாள் விண்பயணத்தை முடித்துக் கொண்டு விண்கலம் எண்டவர் ஃபுளோரிடாவில் இருக்கும் கென்னடி விண்மையத்தில் உள்ளூர் நேரம் வெள்ளி பிற்பகல் 15:48க்கு பத்திரமாகத் தரையிறங்கியது. எண்டவர் விண்கலத்தில் 7 விண்வெளி வீரர்கள் திரும்பினர்.
2010ஆம் ஆண்டுவாக்கில் ஓய்வுபெறும் முன்னர் மேலும் 7 விண்பயணங்களை இவ்விண்கலம் மேற்கொள்ள உள்ளதாக நாசாவின் தலைவர் சார்லஸ் போல்டன் தெரிவித்துள்ளார்.
புவிக்கு மேல் 240 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு புவியை வலம் வந்துகொண்டிருக்கும் பன்னாட்டு விண் நிலையத்தில் உள்ள ஜப்பான் நாட்டு விண்ணாய்வுப் பரிசோதனைக் கூடமான 'பார்ச்'சுக்குரிய உதிரி பாகங்களை இம்முறை எண்டவர் எடுத்துச் சென்றது.
1992 மே 7 அன்று தன் கன்னிப் பயணத்தைத் தொடங்கிய எண்டவர் இன்றுவரை 23 முறை விண்பயணங்கள் மேற்கொண்டுள்ளது; 3,964 முறை புவியை வலம் வந்துள்ளது; 16 கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர்கள் தொலைவைப் பயணித்துள்ளது; 3 துணைக் கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்நேரம் விண் செய்திப் பிரிவு)

| < முந்தையது | அடுத்தது > |
|---|




