மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கையாடல் செய்யும் ஊழல்வாதிகளைக் காவல்துறையும் நீதிமன்றங்களும் கண்டுகொள்ளமால் இருப்பதும் ஒருவேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இருப்பவன் செய்யும் இரண்டு ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பிற்காக அவனைக் காவல்துறை நையபுடைப்பதோடு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்குவதும் நாட்டில் மக்கள் கண்டுவரும் அன்றாட காட்சிகளாக மாறிவிட்டன. நீதி என்பது எளியவனுக்கு ஒன்றும் வலியவனுக்கு மற்றொன்றும் என்பது சாரம்!
நாட்டின் ஒவ்வொரு துறைகளிலும் இத்தகைய பாரபட்ச போக்கு பெருகி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. சமீபத்தில் வெளியான வருமானவரி பாக்கித் தகவல்கள் இதனை உண்மைபடுத்தும் முகமாக உள்ளன.
நாட்டின் வளர்ச்சிக்கும் அரசு செயல்படுத்தும் பல திட்டங்களுக்கும் நாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் வரி மிக அத்தியாவசியமானதாகும். இந்த வரியிடும் முறை மட்டும் இல்லையேல், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதையே சிந்திக்க முடியாமல் போய் விடும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரி விதிப்பில், நாட்டில் யார் சரியாக வரிகளைச் செலுத்தி வருகிறார்கள் என்பதும் நாட்டின் வளர்ச்சியில் யார் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.
ஆம், நாட்டின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தி படி, நாட்டில் முறையாக வரி செலுத்தப்படாமல் பாக்கி வைத்துள்ள தொகையின் மதிப்பு 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இது நாட்டின் வேலைவாய்ப்பிற்காக அரசு செலவிடும் தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்பது மற்றொரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
நாட்டில் வருமான வரியைச் சரியாக செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சட்டம் வழிவகை செய்கிறது. அவ்வாறெனில், இந்த வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது சட்டம் மிகக் கடுமையாகப் பாய்ந்திருக்கும் என நாம் நினைத்தோமானால், அது தான் இல்லை. ஏனெனில், இவ்வாறு கோடி கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் சாதாரண பொதுமக்களல்ல; நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் தான் இவ்வளவு பெரிய வரி பாக்கியை அடைக்காமல் வைத்துள்ளன.
அவ்வகையில் ஸ்டெட்காம் நிறுவனம் 50,000 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 333 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இவ்வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 240 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இவ்வாறு நாட்டின் மிக முக்கிய நிறுவனங்களில் முதல் 100 இடத்தைப் பிடிக்கும் நிறுவனங்கள் மொத்தமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக வருமான வரி பாக்கி வைத்துள்ளன.
இத்தனை பெரிய தொகை வரி பாக்கியாக நிற்கும் போதும் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் இலாப கணக்குடன் இப்பெரிய நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் சுமூகமான செயல்பாடுகளுக்கு அரசும் எவ்வித குறையும் வைக்காமல், அதற்குரிய எல்லா சிறப்புச் சலுகைகளையும் முறையாக செய்து வருகின்றன – விசுவாசமான பணியாளனைப் போன்று! நடவடிக்கை எடுக்க வேண்டிய வருமான வரித்துறையினர் எங்கே போயுள்ளனர்? காவல்துறையின் உதவியுடன் எங்காவது 2,000 ரூபாய் 3,000 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள சாதாரண மக்களைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கின்றார்களாக இருக்கும்!
சாதாரண மக்களுக்கு ஒரு நீதியும் வலியவனுக்கு ஒரு நீதியுமாக இதே திசையிலேயே அரசு இயந்திரம் சுழன்றுக் கொண்டிருப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது என்பதை மட்டும் சொல்லி வைப்போம்!

| < முந்தையது |
|---|




