சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத் அலுமினியம் நிறுவனம் கட்டிவரும் அலுமினியத் தொழிற்சாலையின் வெப்ப மின் உற்பத்தி உலையின் புகைபோக்கி இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததால் குறைந்தது 15 தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்றும் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது. 275 மீட்டர் உயரத்துக்கு பிரம்மாண்டமாகக் கட்டப்படத் திட்டமிடப்பட்டு, 100 மீட்டர் உயரம் முழுமையடைந்த நிலையில் இன்று கடும் இடி மின்னலுடன் மழை பொழிந்ததால் இந்த புகைபோக்கி சரிந்தது.
அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 15 பேர் நசுங்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்து குறித்த நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




