நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது அபேட்சகராக முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு ஒன்று எடுக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குடும்ப ஆட்சி, அரசபரம்பரைவாதம் என்பவற்றுக்கு மக்கள் ஆணையைப் பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுவதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, மக்களின் அதிகாரத்தை மக்களுக்கே வழங்க வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம் கொண்ட அரசாங்கமே அமைக்கப்பட வேண்டும். இது நடைபெற வேண்டுமாயின் ராஜபக்ஷ என்ற தனிப்பட்ட குடும்பத்திற்கு மட்டுமே தற்போது வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை இல்லாதொழித்து அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டியதே இன்றைய அவசியத் தேவையாகும்.
அதனையே நாம் இப்போது முன்னெடுத்து வருகின்றோம் என்றும் கூறினார். நேற்று கட்சியின் தலைமையகமான சிரிக்கொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, ராஜபக்ஷ குடும்பத்திற்கு முடிவுகட்டி மக்கள் ஆட்சியுடைய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதன் மூலம் வீழ்ச்சியடைந்துள்ள ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதுமே எமது நோக்கமாகும். நாட்டு மக்களின் அனைத்து வகையிலான உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பு. சகல விடயங்களுக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ள அவசர காலச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை செயற்குழு மேற்கொண்டுள்ளது. அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றமும், ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானமும் தற்போது ஆளுங்கட்சியை நடுங்க வைத்துள்ளது. பிரதமர் பதவி குறித்து பிரச்சினை எழுப்பத் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் முடிவுகள் பிரதமர் பதவியை உறுதிப்படுத்தும். இத்தேர்தலில் சின்னம் ஒரு பிரச்சினையில்லை. சரத் பொன்சேகாவின் சின்னம் எதுவாகவும் இருக்கலாம். நடைபெறவுள்ளது ஜனாதிபதித் தேர்தல் என்பதைவிட ஒரு சர்வஜன வாக்கெடுப்பு என்றே கருத வேண்டியுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களின் பொது வேட்பாளராகவே போட்டியிடுகின்றார் என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




