பாபர் மசூதியைத் திரும்ப ஒப்படைக்க கோரியும், லிபரான் கமிசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர்.
பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6 தேதி நாடெங்கும் பாபர் மசூதியைத் திரும்பக் கட்டக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று தமிழகத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தின. மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டு முன்பாக இந்திய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது நூற்றுக்கணக்கில் பெண்களும் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இப்போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதியின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை பல முன்னணி தொலைக்காட்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்தது.
சென்னை மட்டுமின்றி ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடி கண்டலூர் உட்பட மாநிலத்தின் இதர பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இப்போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




