இன்று மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பார்வையாளர்களை பரவசப்படுத்திய இந்த பரபரப்பான போட்டியில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு தூணாக திகழ்ந்தார்.
முதலில் ஆடிய இலங்கை அணி சங்கக்கராவின் அற்புதமான ஆட்டத்தினால் 206 ரன்களை குவித்தது. ஆரம்பத்தில் தில்சான் வீழ்ந்தாலும் ஜெயசூர்யா-சங்கக்கரா ஜோடி இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சங்கக்கராவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இவர் 31 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். ஜெயசூர்யா 31, ஜெயசிங்கே 38, மாத்யூஸ் ஆட்டமிழக்காமல் 26 ரன்களை எடுக்க இலங்கை 206 ரன்களை எடுத்தது. இந்தியத்தரப்பில் யுவராஜ் 3 விக்கெட்களும்,இசாந்த் சர்மா 2 விக்கெட்களும்,யூசுப் பதான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை எட்ட ஆடிய இந்தியாவுக்கு சேவாக்கும் காம்பீரும் அசத்தலான ஆரம்பத்தை கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சேவாக் 36 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். காம்பீர் 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். அசத்தலான ஆரம்பம் வீணாகாமல் அதிரடியாக ஆடி இந்தியா வெற்றிக்கனியை சுவைக்க வைத்த பெருமை யுவராஜ் சிங்கைச் சாரும். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 60 ரன்களை எடுத்தார் யுவராஜ். கேப்டன் தோனியும் யுவராஜ் சிங்கும் 3 வது விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 80 ரன்கள் குவித்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறியது.
3 விக்கெட்களை வீழ்த்தி 60 ரன்களும் எடுத்த யுவராஜ் சிங் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




