சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் மேலும் கூடுதலாக இரண்டு பிரிவுகளுடன் தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக்கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக இவை செயல்படும். தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தை முதல் அமைச்சர் கருணாநிதி இன்று சென்னை கோட்டையில் தொடங்கி வைத்து அவர் பேசும்போது..
தமிழ்நாடு மின்சார வாரியம் 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு இன்றைக்கு தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும்; மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 214 மெகாவாட் ஆகவும் உள்ளது. இந்த வாரியம் மேலும் செம்மையாகச் செயலாற்றி; மின்உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாக, ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியத்தை, தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என 3 அமைப்புகளாகப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தை இன்று தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழகத்தின் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தொழில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் கூடுதல் மின்சாரம், விவசாயிகளுக்குத் தேவையான இலவச மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதிலும் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் மின்உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டியதில் கவனம் செலுத்துவது மாநில அரசிற்குக் கடமையாகிறது.
கடந்த கால ஆட்சியில் இந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றாததன் காரணமாகத் தற்போது தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதைச்சரி செய்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், மையத் தொகுப்பில் இருந்தும் பெரும் செலவில் மின்சாரம் வாங்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக 2006ஆம் ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்றபின், தற்போது உற்பத்தியாகும் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆயிரத்து 152 மெகாவாட்டாக உயர்த்திடத்திட்டமிடப்பட்டது.
இதற்காக, வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்திக்கும்; மேலும் அதே வடசென்னையில், தேசிய அனல் மின் நிலையத் கழகத்துடன் இணைந்து 1500 மெகாவாட் மின் உற்பத்திக்கும்; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கூடுதலாக 600 மெகாவாட் மின் உற்பத்திக்கும்; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கும்; உடன்குடியில் பாரத மிகுமின் நிலையத்துடன் இணைந்து 1600 மெகாவாட் மின் உற்பத்திக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடப்புதிய மின்திட்டங்களுக்கு இந்த அரசு அனுமதி அளித்து, அதற்கான பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த திட்டங்கள் எல்லாம் 2012 இறுதியில் முடிவடையும். அப்பொழுது, நமது மின்உற்பத்தி 15 ஆயிரத்து 152 மெகாவாட்டாக உயரும்.
இது நமது வருங்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு இந்த அரசினால் உருவாக்கப்பட்டுள்ள மின் திட்டங்கள் ஆகும். இந்த மின் திட்ட பணிகளை மேற் பார்வையிடுவதற்கும் இதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தைச் சரியான முறையில் பகிர்ந்தளிப்பதற்கும் இப்போது புதிதாக ஏற்படுத்துகின்ற இந்த கழகங்கள் பயன்படும் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே அறிவித்தவாறு, தமிழகத்தைப்பொறுத்தவரை மின் வாரியம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது. இந்தப் புதிய மின் உற்பத்திக் கழகங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, பணியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
இந்த மூன்று நிறுவனங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் தலைமையிலேயே தொடர்ந்து இயங்கும். இந்த மூன்று நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள், அலுவலர்கள் தங்களது விருப்பப்படி, எந்த நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மூன்று நிறுவனங்களிலும் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் இப்போது அடைந்து வரும் அனைத்துச் சலுகைகளையும் தொடர்ந்து பெறுவார்கள்.
இன்று தொடங்கப்படும் தமிழ்நாடு மின்தொடர் அமைப்புக்கழகம் தமிழகத்தில் சிறப்பான மின்விநியோகத்திற்கு உதவிட என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




