சமாஜ்வாதி கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகியுள்ளார். அமர்சிங்கின் ராஜினாமாவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியதற்குப் பின் இந்த விலகல் அறிவிப்பு நடந்துள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் பதவி விலகியதை அடுத்து, மற்றொரு பொதுச் செயலாளரான நடிகர் சஞ்சய் தத் தாமும் பதவி விலகுவதாக அறிவித்தார். மேலும் ஒரு பொதுச் செலயாளரான உபைதுல்லா அஜ்மி தாமும் பதவி விலகுவதாக ஞாயிற்றுக் கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் சஞ்சய் தத்தும் அஜ்மியும் அமர்சிங்குக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். அமர்சிங் கட்சியில் நீடிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் எல்லை மீறுகிறார்கள் என்று அஜ்மி கூறியுள்ளார். திங்கள் கிழமையன்று தாம் டில்லிக்குச் சென்றதும் தம்முடைய ராஜினாமாவை கட்சித் தலைமைக்கு அனுப்புவேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகிய அமர்சிங் தன்னுடைய வலைப்பூவில், எவ்வாறெல்லாம் கட்சிக்காக உழைத்துள்ளேன், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தன் உடல்நிலை மோசமாக இருந்தபோதும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் கட்சி தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் எழுதியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




