கோவையில் நடத்த திட்டமிட்டிருக்கும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதி கோரும் மனு தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் அளிக்கப்படும் விவரங்களை முழுமையாகப் பரிசீலித்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை பிப்ரவரி 6,7 ஆகிய தேதிகளில் நடத்த அனுமதி கோரி புதிய தமிழகம் கட்சியினர் கோவை மாநகர காவல்துறையினரிடம் விண்ணப்பித்தனர். இந்த மனுவை கோவை காவல்துறை பரிசீலிக்கவில்லை. மனுவைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதி கோரும் புதிய தமிழகத்தின் மனுவை நிராகரித்து கோவை மாநகர காவல்துறை துணை கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கிருஷ்ணசாமி தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. வெங்கட்ராமன், "கோவை மாநாட்டுக்கு அனுமதி கோரும் மனுவைப் பரிசீலிக்கும் போது கிருஷ்ணசாமி தரப்புக்குக் காவல்துறை எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. எனவே, இந்த மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய தமிழகத்தினரின் மனுவைக் கோவைக் காவல்துறை மீண்டும் பரிசீலித்து பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




