தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சனிக்கிழமையன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய நடிகர் அஜீத், அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.அரசியல் நிகழ்ச்சிகளில் தாங்கள் பங்கேற்காவிடில் தங்களை தமிழ் எதிரிகள் என்று சித்தரிக்கிறார்கள். ஆனால் அதே வேளை நடிகர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் மிரட்டுகிறார்கள். அரசியில் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அவர்கள் நேரடி அரசியலில் ஈடுபட்டால் எதிர்ப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நடிகர் அஜீத்தின் வெளிப்படையான இப்பேச்சை வெகுவாக ரசித்த ரஜினிகாந்த், அஜீத் இவ்வாறு பேசிய போது எழுந்து நின்று கைதட்டியதை விழாவில் குழுமியிருந்தோர் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
பின்னர் பேசிய கருணாநிதி, அஜீத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அஜீத்தின் குற்றச்சாட்டிற்குப் பதில் அளித்தார். இந்த விழாவிற்கு வந்திருப்பவர்கள் அரசியல் காரணமாக வரவில்லை என்றும், கலைக்குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற எண்ணம் காரணமாக வந்திருப்பதாகவும் கூறினார்.
சினிமா உலகில் அரசியலைக் கலப்பதற்கு தான் எதிரானவன் என்று கூறிய கருணாநிதி, சினிமா உலகில் அரசியல் தானாகவே நுழைந்துவிட்டால் அதற்கு நான் காரணமல்ல என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் மூலம் திரையுலகிற்கு பலன் கிட்டினால் தமக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறிய கருணாநிதி, ஆனால் அரசியலை திரையுலகில் நுழைத்து அதனால் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.
அஜீத்தின் இக்குற்றச்சாட்டு குறித்து இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் அமிதாப்பச்சன், இயக்குநர்கள் பாரதிராஜா, வி.சி. குகநாதன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர், இவ்விழாவில் பங்கேற்க வேண்டும் என்று எவரையும் தாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை என்று கூறினர்.
எந்த அரசியல்வாதியின் வற்புறுத்தலுக்காகவும் நான் இங்கு வரவில்லை. தமிழ் சினிமாவின் மீது எனக்கு உள்ள அன்பு காரணமாகவே நான் இவ்விழாவில் கலந்து கொண்டேன் என்று அமிதாப்பபச்சன் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




