"சர்க்கரை சாப்பிடாவிட்டால் யாரும் செத்துவிட மாட்டார்கள், சர்க்கரையை ஏன்தான் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள் என்றே தெரியவில்லை, சர்க்கரை அப்படியே விலை ஏறினால்தான் என்ன, அதனால் குடியா முழுகிவிடும்?'' என்று சரத்பவார் தலைமையிலான தேசிவாத காங்கிரஸின் பத்திரிக்கையான ராஷ்டிரவாதியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் மதுகர் பிச்சட். பத்திரிகை ஆசிரியர் சுதிர் போங்கலே ஆவர்.நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுமுகமாக உள்ளது. இதில் கடந்தச் சில நாட்களாக சர்க்கரையின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டம் அறிவித்து விட்ட நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சரான சரத்பவார் கட்சியின் பத்திரிக்கை, விலைவாசி உயர்வைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்ற ரீதியில் தலையங்கம் எழுதியுள்ளது.
"சர்க்கரை, உப்பு, அரிசி போன்ற வெண் பண்டங்கள் விஷத்துக்குச் சமம், எனவே 40 வயதுக்கு மேல் போனால் இவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சர்க்கரை வியாதி வந்தவர்கள் எந்த வகையிலும் சாப்பாட்டிலும் பானத்திலும் சர்க்கரையை அறவே சேர்த்துக் கொள்வதே இல்லை. மனிதனுக்கு சர்க்கரை அத்தியாவசியமான உணவுப் பண்டமே அல்ல. அதன் விலை ஏறிவிட்டது என்று ஏன்தான் கூரை மீது நின்று இப்படி கூப்பாடு போடுகிறார்கள் என்றே தெரியவில்லை.
சராசரியாக இந்தியர்களின் மாதச் செலவில் சர்க்கரை உள்ளிட்ட சாப்பாட்டுச் செலவு 10% முதல் 15% வரைதான் இருக்கும். பெட்ரோல், டீசல், கார், பைக், அழகு சாதனங்கள், சினிமா - டிராமா, விளையாட்டு, டி.வி., பிரிட்ஜ் போன்றவற்றுக்கு செலவு உயரும்போதெல்லாம் கூக்குரல் எழுப்பாதவர்கள் இந்தச் சர்க்கரைக்கு மட்டும் ஏன் இப்படி கூட்டமாக கூச்சல் எழுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
சர்க்கரை வியாதிக்காரர்கள் சர்க்கரையே சாப்பிடாமல் இருக்கவில்லையா? மற்றவர்களும் இதைப் பின்பற்றி சர்க்கரையே வேண்டாம் என்று ஒதுக்கலாமே?
சர்க்கரை கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய்வரை உயர்ந்தால்தான் என்ன? 4 அல்லது 5 பேர் கொண்ட குடும்பத்துக்குக் கூடுதலாக 60 ரூபாயோ 90 ரூபாயோ தானே செலவாகப் போகிறது? இதைத் தாங்கிக் கொள்ளக்கூடாதா?
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்ட பிறகு மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுடைய சம்பளம் அதிகரித்த அளவோடு ஒப்பிடும்போது இந்தச் சர்க்கரை விலையேற்றம் ஒரு பெரிய விஷயமா?
சர்க்கரை விலை உயர்வால் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன என்பதெல்லாம் வெறும் பேச்சு" என்று அப்பத்திரிக்கையின் தலையங்கம் கூறுகிறது.
சுமார் ஓராண்டுக்கு முன்பு கிலோ 22 ரூபாயாக வெளிச் சந்தையில் விற்கப்பட்ட சர்க்கரை இப்போது கிலோ ரூ.42 முதல் ரூ.43 வரை விற்கப்படுகிறது. இது நாடு முழுக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இது காங்கிரஸாரையும் எட்டியிருக்கிறது. எனவே அவர்கள் உணவுத்துறை அமைச்சரான சரத்பவாரை, விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். எனவே காங்கிரஸார் மீதுள்ள கோபத்தை இப்படி தலையங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது தேசியவாத காங்கிரஸ் கட்சி.
விலைவாசி உயர்வுக்கு சரத்பவார் மட்டுமே காரணம் அல்ல என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரபுல் படேல் தில்லியில் நிருபர்களிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். பிரதமரும் மத்திய அமைச்சரவையும்கூட இதற்கு பொறுப்பு என்பதே அவருடைய பதிலுக்கு அர்த்தம். எனவே பவாரை பலிகடா ஆக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் தேசியவாத காங்கிரஸாருக்கு எழுந்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




