சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்காக, அரிமா சங்கம் சார்பில் மெரினா காந்தி சிலை பின்புறம் ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அரிமா சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் நிலையத்தை, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பேசும்போது:
சென்னை கடற்கரையை உலக தரத்துக்கு மேம்படுத்த வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் உத்தர விட்டுள்ளனர்.அதனப்படையில் கோட்டை எதிரே ரூ.10 கோடி செலவிலும்,அதைத் தொடர்ந்து ரூ.27 கோடி செலவில் மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் கடற்கரை அழகு படுத்தப்பட்டுள்ளது. இதைப் பராமரித்து பாதுகாக்க 67 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரைக்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 1 லட்சம்பேர் வருகிறார்கள்.மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சிலர் நீரூற்று தோண்டி ஒரு டம்பளர் குடிதண்ணீர் ஒரு ரூபாய் என்று விற்பனை செய்து வந்தனர். அதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கடற்கரைக்கு வந்து செல்லும் பயணிகளும், பொது மக்களும் பயன் பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான குடிநீர் நிலையங்களை அமைத்து தரும்படி அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ரவுண்டேபிள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளை அழைத்துப் பேசினேன்.
அதன் பயனாக அரிமா சங்கத்தினர் மூலம் அமைக்கப்பட்ட முதல் குடிநீர் நிலையத்தை இன்று திறந்து வைத்திருக்கிறேன். இந்த குடிநீர் நிலையத்தின் மூலம் தினமும் 12 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். கடற்கரைக்கு வருவோர் சுத்தமான காற்றுடன் சுத்தமான குடிநீரையும் பருகும் நோக்கத்துடன் இது வழங்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் மேலும் 4 இடங்களில் இது போன்ற குடிநீர் நிலையங்கள் அமைக்கப் படுகிறது. இதன் மூலம் மெரினா கடற்கரைக்கு வரும் அனைவரும் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறலாம்.
இது தவிர, மெரினா கடற்கரையில் பயணிகள் வசதிக்காக தற்போது ரூ.2 லட்சம் செலவில் நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.22 லட்சம் செலவில் 3 இடங்களில் நவீன கழிப்பறை கட்டப்படுகிறது என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சத்யபாமா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, அரிமா சங்க ஆளுனர் அண்ணாமலை, குடிநீர் நிலைய பொறியாளர் சுரேஷ் பாபு, என்.ஆர்.தனபாலன், நரேந்திர பாபு, நந்தகோபால், பஞ்சநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




