கடலூர் அருகே கடற்கரை கிராமமான தியாகவல்லியில் பழங்கால பிரெஞ்சு நாணயம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் குறும்பட தயாரிப்பாளருமான சாமிக்கச்சிராயர் கண்டுபிடித்துள்ளார்.
கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கச்சிராயர். இவர் கடலூர் திரைப்பட இயக்கச் செயலாளராகவும் குறும்படத் தயாரிப்பாளராகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். சாமிக்கச்சிராயர் தனது கிராமத்தில் தொடர்ந்து தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(07/02/2010) அன்று அங்குள்ள வயல் வெளியில் பழங்காலச் செப்பக்காசு ஒன்றை கண்டெடுத்தார். வட்ட வடிவமான இந்தச் செப்புக் காசின் ஒரு புறம் கோழிச் சின்னமும், மறுபுறம் புதுச்சேரி 1837 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துச் சாமிக்கச்சிராயர் நேற்று(08/02/2010) அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, "கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் அரிக்கமேடுவரை பல்லாண்டுகளாக பழந்தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் நாணையங்கள், பானை ஓடுகள், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கலன்கள், மது ஜாடிகள், பாசிமணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்து உள்ளன. கடலூர் கடற்கரையோர கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் திட்டுகள் பல காலங்களில் நடந்த கடல்கோள்களால் அழிந்த நகரங்கள், கிராமங்களின் சுவடுகளாக உள்ளன. அத்தகைய மணல் குன்றுகளில் இருந்துதான் இத்தகைய பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன. இந்த மணல் குன்றுகள் பல ரசாயனத் தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




