டெல்லி: 2011 ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக கூட்டணி ஏற்படும் என்பதெல்லாம் வெறும் ஊகமே. திமுகவுடன் இப்போதுள்ள அரசியல் தோழமையும் கூட்டணியும் அப்படியே தொடரும்" என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் கமிஷனின் சிறப்பு நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேசியப் பத்திரிக்கையொன்று "காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கத் தயாராக இருப்பதாகவும் இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் தான்" என்றும் ஜெயலலிதா கூறியதாக அவரின் பேட்டியை வெளியிட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கை தொடர்பாளர் ஷக்கீல் அகமது, "இப்போதுள்ள எந்த அரசியல் தோழமைக் கட்சியையும் உதறும் பேச்சுக்கே இடம் இல்லை; காங்கிரஸ் கட்சியின் நம்பகமான தோழன் திமுக. திமுகவுடன் மத்தியிலும் மாநிலத்திலும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே திமுகவை விட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




