லுஃப்தான்சா விமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 4000 விமானிகள் தங்கள் பணி உத்தரவாதம் தொடர்பாக அந்நிறுவனத்துடனான நடத்திய பேச்சுவார்த்தை முறிவுற்றதை அடுத்து நான்குநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நிறுவனத்தின் விமான சேவைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
நாள்தோறும் 1800 விமான சேவைகளை அளித்து வரும் லுஃப்தான்சா இந்த வேலை நிறுத்தத்தால் நான்கு நாட்களில் 3000 சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு 25 மில்லியன் யூரோக்கள் வரை லுஃப்தான்சாவுக்கு நட்டம் ஏற்படும் எனத் தெரிகிறது. அதோடு ஜெர்மனியின் பொருளாதாரத்துக்கும் லுஃப்தான்சாவின் நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாதப் பின்னடைவை இந்த வேலை நிறுத்தம் ஏற்படுத்தும் என ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் பீட்டர் ராம்சேர் எச்சரித்துள்ளார்.
குறைந்த சம்பளத்துக்கு வெளிநாட்டவர்களை அதிகப்படியாக லுஃப்தான்சா வேலைக்கு அமர்த்தித் தங்களின் பணி உத்தரவாதத்துக்கு வேட்டு வைப்பதாக விமானிகள் சங்கம் லுஃப்தான்சா மீது குற்றம் சுமத்திப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தது. இது தோல்வியில் முடியவே விமானிகள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




