அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 62-வது பிறந்தநாள் விழா வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதனன் துவக்கி வைத்தார். வட சென்னை மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆற்றல்,அறிவு,திறமை,செயல்பாடு கொண்டவர். துனிச்சலின் மறுபெயர்தான் புரட்சித் தலைவி அம்மையார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு கொண்ட இயக்கமாக மாற்றியவர். இது வீழ்த்த முடியாத ஒரு மக்கள் இயக்கம்.எம்.ஜி.ஆர்.மறைவுக்குப்பின் அதிமுக சிதறிவிடும், அழிந்து விடும் என்றெல்லாம் கனவு கண்டார்கள்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு அழிக்க முடியாத சக்தியாக ஜெயலலிதா உருவெடுத்தார்.கோடிக்கணக்கான தொண்டர்களை கட்டிக் காத்து இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். இரண்டு எம்.எல்.ஏ.க்களை தன்பக்கம் இழுத்து அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. திட்டம் போடுகிறது.
புரட்சித்தலைவியால் அடையாளம் காட்டப்பட்டு தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரும் மனசாட்சியை மறந்து கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். புரட்சித்தலைவி அடையாளம் தெரியாதவர்களையும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர்.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ரவுடிகள் கொட்டம் இல்லை. சென்னையில் கடந்த 30 நாட்களில் 28 படுகொலைகள் நடந்துள்ளன. விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. மக்கள் விழித்துக்கொண்டார்கள். ஜனநாயகம் பற்றி பேச புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே தகுதி உண்டு. தமிழக வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த ஜெயலலிதாவால் மட்டும்தான் மீட்க முடியும் என்று வைகோ பேசினார்
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் சேக் டாவுட் உள்ளிட்ட பலர் பேசினார்கள். கூட்டத்தில் 62 ஏழைகளுக்கு சுய தொழில் செய்ய சைக்கிள் ரிக்சா, மீன்பாடி வண்டி, இட்லி பாத்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள், அயர்ன் பாக்ஸ், தையல் எந்திரம், பூ வியாபாரம் செய்ய மேசை, கிரைண்டர், பழ வியாபாரம் செய்ய தள்ளுவண்டி ஆகியவை வழங்கப்பட்டது.