வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூருக்கும் பிரச்னைகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஏற்கனவே அரசின் சிக்கன நடவடிக்கைகளை ட்விட்டரில் விமர்சித்து எழுதி பின்னர் தெரியாமல் எழுதிவிட்டேன் என பின் வாங்கினார். பிறகு குடிபுகல் சம்பந்தமாக எழுதி அமைச்சர் கிருஷ்ணாவின் ”கண்டிப்புக்கு” ஆளாகினார். தற்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் சவுதி அரேபியா சென்றுள்ளார் சசி தரூர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு மத்தியஸ்தராக சவுதி அரேபியா செயல்படலாம் என பொருள்படும் படி ட்விட்டரில் எழுதி விட்டார். சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பதால் மத்தியஸ்தம் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தாம் இவ்வாறு கூறவில்லை எனவும் தனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் மறுத்து எழுதியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக சவுதி அரேபியா இருக்க வேண்டும் என குறிப்பிடவில்லையெனவும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பிரச்னைகள் சம்பந்தமாக இந்தியா சவுதி அரேபியாவிடம் பேச வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளதாகவே கூறுகிறார்.பாகிஸ்தானிடம் நெருங்கிய உறவு வைத்துள்ள சவுதி அரேபியா இந்தியாவின் கருத்து பற்றி பாகிஸ்தானிடம் தெரிவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




