ரியாத் - பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சென்றுள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, சவுதி அரேபிய பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பின் இப்ராகிம் அல்-நைமியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு தற்போது வழங்கும் கச்சா எண்ணையின் ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டது.
'இந்தியாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு சவுதி அரேபியா வழங்கி வரும் கச்சா எண்ணையின் அளவை 2 கோடியே 55 லட்சம் டன்னில் இருந்து 4 கோடி டன்னாக உயர்த்தி வழங்குவதற்கு நைமி உறுதி அளித்திருக்கிறார்' என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முரளி தியோராவுடனான சந்திப்பிற்குப் பின் சவுதி அமைச்சர் நைமி கூறும்போது, "இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் தேவைகளை சந்திக்கும் அளவிற்கு சவுதி அரேபியா உதவி செய்யும்," என்று உறுதியளித்தார். இதன் மூலம் இந்தியாவில் பதிந்தா, பினா, பாரதீப் துறைமுக பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தேவையான கச்சா எண்ணை கிடைக்கும் என்று தெரிகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




