மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அதிரடியாக அறிவித்தனர்.
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும் போது, "மகளிர் மசோதா என்பது அரசியல் வழிப்பறியாகும். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். மகளிர் மசோதாவை தற்போதைய வடிவிலேயே நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்.
இடதுசாரிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியானது அல்ல. மசோதாவை வீழ்த்த போதிய எண்ணிக்கை இல்லாதபோதும், எங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி மசோதாவை எதிர்ப்போம்" என்று கூறினார்.
சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறும் போது, "முஸ்லிம்கள், தலித்துகள் முன்னேறுவதை காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் விரும்பவில்லை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
"மகளிர் மசோதாவை எதிர்ப்பதற்காக எம்.பி. பதவி உள்ளிட்ட எதையும் இழப்பதற்கு தயாராக உள்ளோம்" எனவும் இருவரும் இணைந்து தெரிவித்தனர்.
"மகளிர் மசோதா தற்போதைய வடிவிலேயே நிறைவேறினால், ஆதரவு வாபஸ் கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம்" என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் பி.சி.குப்தா கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




