"மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் விவாதம் நடத்தி நிறைவேற்றுவதுதான் சிறப்பானது" என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். "மகளிர் மசோதா நிறைவேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி நேற்று(திங்கள்கிழமை) குடியரசுத் தலைவர் மாளிகையில் பெண் பத்திரிகையாளர்களுடன் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்துரையாடினார். அப்போது மகளிர் மசோதா தொடர்பாக மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் நேற்று(திங்கள்கிழமை) சந்தித்தார். அப்போது மகளிர் மசோதா தொடர்பாக தமது கட்சியின் நிலையை விளக்கிக் கூறினார். "தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்ற தமது கட்சியும் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சியும் எதிர்ப்பதாக அவர் கூறினார். மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் எந்தப் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்" என்று குடியரசு தலைவரிடம் லாலு வலியுறுத்தினார்.
முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை லாலுவும் முலாயம் சிங்கும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"அரசியல் சட்டத் திருத்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற இந்த அரசு விரும்பவில்லை" என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். "மசோதாவின் எல்லா அம்சங்கள் குறித்தும் அரசு விவாதிக்க தயாராக உள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




