இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காகித பைகளுக்கு மவுசு கூடுகிறது!

E-mail அச்செடுக்க

பாலிதீன் பைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதைத் தொடர்ந்து காகித பைகளுக்கான தேவை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது காகித பைகள் தயாரிப்பவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நெய்வேலி சரகத்திலும் காகிதப் பைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலி நகரியத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரியின் உத்தரவின் பேரில் நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்செல்வன் பாலிதீன் பைகளுக்கு தடை விதித்தார்.

இதோடு நில்லாமல் நெய்வேலி நகரில் கடை வைத்திருப்போர் யாரும் பாலிதீன் பைகளைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, கடை நடத்துவதற்கான உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் என்.எல்.சி. நகர நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெட்டிக் கடை முதற்கொண்டு, மளிகை, துணி, ஓட்டல் மற்றும் குறிப்பாக இறைச்சிக் கடை என அனைத்துக் கடை உரிமையாளர்களும் பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். டீக் கடைகளில் பிளாஸ்டிக் டம்பளருக்குப் பதில் தடிமனாக உள்ள பேப்பர் டம்பளர்களையே பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

இதனால் முதலில் நெய்வேலி நகர மக்கள் சற்று அதிருப்தியுடன் தான் காணப்பட்டனர். இருப்பினும் நகர நிர்வாகம் விடா முயற்சியாக பாலிதீன் பயன்பாட்டை தீவிரமாக கண்காணித்து வந்ததால் கடைகளில் பாலிதீன் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

நெய்வேலி நகர மக்கள் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள தயாராகி விட்டனர். ஓட்டலுக்குச் செல்வோர் கையில் டிபன் பாக்ஸை எடுத்துச் செல்கின்றனர், இறைச்சிக் கடைகளுக்குச் செல்வோரும் கையில் அதற்குத் தேவையான பாத்திரத்தை எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். நெய்வேலி நகரின் சாலை ஓரத்திலும், விளையாட்டு மைதானங்களிலும் பரவிக்கிடந்த பாலிதீன் பைகளைத் தற்போது காணமுடியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பழைய பேப்பர் விலை நெய்வேலி நகரத்தைப் பொறுத்தமட்டில் சற்று அதிகரித்துள்ளது. மேலும் வீட்டிலுள்ள சில பெண்கள் பழைய பேப்பர்களைக் கொண்டு, கால். அரை, முக்கால் மற்றும் ஒரு கிலோ அளவுகளில் பைகளைத் தயாரித்து கடைக்கு விநியோகித்து வருகின்றனர். இதுபோன்று பைகள் ஒரு கிலோ ரூ.25 வரை விலை போகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பாலிதீன் பைகளுக்குத் தடைவிதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு, சிறுதொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இது அமையும் என்கின்றனர் பொது நல ஆர்வலர்கள்.

நெய்வேலியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்தடை கடுமையாக்கப்படுமானால், விரைவில் தமிழகம் பாலிதீன், ப்ளாஸ்டிக் இல்லாத தமிழகமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: rashid,doha, March 11, 2010
நெய்வேலியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்தடை கடுமையாக்கப்படுமானால், விரைவில் தமிழகம் பாலிதீன், ப்ளாஸ்டிக் இல்லாத தமிழகமாக மாறும் என்பதில் ஐயமில்லை.



கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்