"மாநிலங்களவையில் ஒன்றுக்கு எதிராக 186 ஓட்டுகளுக்கு பாஸாக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, முதல் மாநிலமாக தமிழகம் நிறைவேற்றும்" என்று, தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.
கோவை, புலியகுளத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசும் போது, "சென்னை, மதுரை, தஞ்சையைத் தொடர்ந்து கோவைக்கு செம்மொழி மாநாட்டின் மூலம் பெருமை கிடைத்துள்ளது. அதோடு மாநாட்டை ஒட்டி கோவையின் வளர்ச்சிக்காக ரூ.300 கோடியை ஒதுக்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழன் வாழும் இடமெல்லாம் செம்மொழி மாநாடு பேசப்படும். வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. எல்லா நாட்டினரும் மதிக்கும் திருக்குறளைப் போன்ற தனித்தன்மை மிக்க நூலை வேறெந்த மொழியிலும் காண முடியாது. இத்தகைய சிறப்புகளை உடைய தமிழுக்கு தி.மு.க. ஆட்சியில்தான் செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம், குமரியில் திருவள்ளுவர் சிலை ஆகியவை தமிழரின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றுகின்றன.
செம்மொழி அந்தஸ்து என்பது தமிழுக்கு கிடைத்துள்ள முத்திரை; தமிழர்களுக்கு உலக அரங்கில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம். இத்தகைய சிறப்புடைய மொழி, ஆராய்ச்சிக்காக நடைபெறக் கூடிய உலகத் தமிழ்ச் செம்மொழி வரலாற்றில் தனி இடத்தைப் பிடிக்கும்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே தி.மு.க. அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு அத்தகைய இடஒதுக்கீட்டை வழங்கிவிட்டது.
மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குறைந்தது 15 மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். அந்த வகையில் தமிழகம் முதல் மாநிலமாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றும்" என்று பேசினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




