"இடைத்தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்'' என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
பென்னாகரம் தொகுதி எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வந்த வாகனத்தைத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், காரினுள் அமர்ந்த நிலையிலேயே மறியலில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக பென்னாகரம் சென்ற போது மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் கார் நேற்று(செவ்வாய்க்கிழமை) சோதனை செய்யப்பட்டது.
இந்த இரு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில், "தருமபுரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினருக்கு எதிராக பாமக அளிக்கும் புகார் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. வாகனச் சோதனை என்ற பெயரில் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தடுக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "பென்னாகரம் தொகுதிக்குள் நுழையும் அமைச்சர்கள், கட்சித் தலைவர்களின் வாகனங்களைச் சோதனையிட்ட பிறகே அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதியில் உள்ள சோதனைச் சாவடியை பாமகவினர் சேதப்படுத்தியாகத் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் விரட்டி அடித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தர்மபுரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அமுதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




