"தமிழகத்தில் அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மலரப் போகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளது இந்த ஆண்டின் நல்ல நகைச்சுவை" என வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
புதிய மற்றும் பழைய சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில், "5 முறை முதல்வராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏ.வாகவும், போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருபவர் முதல்வர் கருணாநிதி.
ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைப்பிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்கு திட்டங்களைத் தீட்டிவரும் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் உருவப் படத்தை சட்டப் பேரவைக்குள் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் நான் முன்மொழிந்தேன்.
அப்படியொரு தீர்மானத்தை முன்மொழியப்போவது முதல்வருக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாது. நான் முன்மொழிந்த பிறகு அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் அதனை வரவேற்றனர். அமைச்சர்கள் மட்டுமல்ல, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தொலைபேசியில் எனக்கு நன்றி தெரிவித்தனர்.
அவரது அறிக்கையின் இறுதியில் அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மலரப் போகிறது என்றும் அப்போது மாற்றி அமைக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் நல்ல நகைச்சுவை வாசகம் இது. அவரது கனவு நிச்சயமாக நிறைவேறாது" என்று வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




