பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 5 ஒரு நாள் ஆட்டங்கள் ,ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதற்கிடையில் சோயப் மாலிக் தான் வீரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துகிறார் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முஹம்மது யூசுப் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அனைத்து விவகாரங்களையும் கவனமாக கண்காணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இதை விசாரிக்க ஒரு குழு அமைத்தது. விசாரணை குழு அதன் விசாரணையை முடித்து நேற்று தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் மற்றும் முஹம்மது யூசுப் ஆகியோருக்கு ஆயுட்கால தடையும், வேகப் பந்து வீச்சாளர் ரானா நவீத் மற்றும் சோயப் மாலிக்குக்கு ஒரு வருடத் தடையும் ரூ 20 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. பந்தை சேதப் படுத்திய ஷாஹித் அப்ரிடி , ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அக்மல் சகோதரர்களுக்கு ரூ 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




