விற்பனைக்காக தமிழகத்திலிருந்து போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கொண்டு செல்ல முயன்ற, தமிழக அரசின் இலவச கலர் ட்டி.வி.க்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போடியிலிருந்து கேரளம் செல்லும் வேன் ஒன்றில் தமிழக அரசின் இலவச கலர் ட்டி.வி.க்கள் எடுத்துச் செல்லப்படுவதாக, தனிப்பிரிவு காவலர் பவுன்ராஜ், சுப்புராம் ஆகியோருக்கு நேற்று(சனிக்கிழமை) தகவல் கிடைத்தது. இது குறித்து போடி முந்தல் சோதனைச் சாவடியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வேனைக் காவல்துறையினர் மடக்கி சோதனை செய்தனர். வேனில் தமிழக அரசின் 8 இலவச கலர் ட்டி.வி.க்கள் இருந்தன.
இதுகுறித்து போடி கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் வேன் டிரைவரிடம் விசாரித்தனர். இலவச கலர் ட்டி.வி.க்களை, கேரள மாநிலம் பூப்பாறைக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் குரங்கனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வேன் டிரைவரான போடி குலாலர்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் பால்பாண்டியை (32) கைது செய்தனர்.
வேன் மற்றும் கலர் டி.வி.க்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




