தனது கணவரும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா மீதான வழக்குகளிலிருந்து விடுதலையாவது சுலபமான காரியமல்ல என்று அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்தார்.சரத் பொன்சேகா தற்போது ராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராஜபக்சே அரசை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல வழக்குகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டு இலங்கை ராணுவ கோர்ட்டில் விசாரணை நடக்கவுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி அனோமா கூறியதாவது, ராணுவ சிறையிலிருந்து பொன்சேகா விடுதலையாகி வெளியே வரவேண்டும் என்றே பொன்சேகா விரும்புகிறார். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்று அனோமா கூறினார். இந்த வழக்குகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரை விடுவிப்பது குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் இந்த வேண்டுகோளுக்கெல்லாம் ராஜபக்சே அரசாங்கம் செவிசாய்க்காது என்பது தெரியும். அவர் விடுதலையாக வேண்டுமெனில் சட்ட ரீதியாக மட்டுமே சாத்தியமாகும். இலங்கை நீதித்துறை மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.
எனினும் வழக்குகளில் இருந்து விடுபடுவது சுலபமான காரியமல்ல என்பதை பொன்சேகா உணர்ந்துள்ளார்.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம், அவரை வெளியில் கொண்டு வருவோம். அதற்கான மன உறுதி எனக்கு உள்ளது. இந்த நெருக்கடிகளில் இருந்து விரைவில் மீள்வோம் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு அனோமா கூறினார்.
இந்நிலையில் பொன்சேகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஆள்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்துள்ளார் மனைவி அனோமா.
'பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவரை ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாது. சிவில் சட்டத்தின் கீழ் அவரை விசாரிக்க வேண்டும்'என்று மனுவில் கோரியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




