தமிழகம் மற்றும் கர்நாடக சுற்றுலா துறையினர் ஏற்பாட்டில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க "தங்க ரதம்" சுற்றுலா ரயில் சேவை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் இருந்து தங்க ரதம் சுற்றுலா ரயில் சேவை, இன்று காலை 8 மணிக்கு தெற்கு ரயில்வே மற்றும் தமிழக-கர்நாடக சுற்றுலா துறை அதிகாரிகளால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படுகிறது.
குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் பயணம் செய்ய 3 பேருக்கு(ஒரு கேபின்) ரூ. 63,840 உத்தேச கட்டணமாக இருக்கும். அரண்மனையைப் போல ஆடம்பர வேலைப்பாடுகள், வசதிகளுடன் இருக்கும் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு உயர் தர உணவு, பானங்கள் வழங்கப்படும்.
நடமாடும் 5 நட்சத்திர ஓட்டலைப் போன்ற பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட இந்த சுற்றுலா ரயில் முதல்முறையாக சென்னை சென்ட்ரலிலிருந்து இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றுலா பயணம், பெங்களூரில் இருந்து புறப்பட்டு, 7 இரவு, 8 பகல் கொண்டதாக இருக்கும்.
இந்தத் தங்கரதம் ரயில் சேவை திட்டத்தை இயக்க கர்நாடக மற்றும் தமிழக சுற்றுலா துறைகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சுற்றுலா துறை சார்பில், "தங்க ரதம்" சுற்றுலா ரயில் ஏற்கெனவே, பெங்களூர், கபினி, மைசூர், ஹசன், ஹம்பி, படாமி, கோவா வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து முதன் முறையாக இயக்கப்பட இருக்கும் இந்தத் திட்டத்தின் படி, தங்கரதம் ரயில் முதல் நாளில், பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும். மாமல்லபுரம், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவனந்தபுரம், பூவார், வேம்பநாடு ஏரி, குமரகம், கொச்சி ஆகிய இடங்களுக்குச் சென்ற பின் மீண்டும் பெங்களூருக்கு 8-ம் நாளில் திரும்ப வந்து சேரும்.
தங்க ரதம் சுற்றுலா ரயில் குறித்த மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் கீழ்கண்ட இணைதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
இணையதள முகவரி: www.goldenchariottrain.com

| < முந்தையது | அடுத்தது > |
|---|




