"தமிழகத்தில் காவல்துறை மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் போது கூடுதலாக 20,000 காவல்துறையினர் நியமிக்கப்படலாம்" என மாநில டி.ஜி.பி. லத்திகா சரண் கூறியுள்ளார். மதுரையில் தென்மண்டல அளவிலான காவல்துறையினரின் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் நேற்று(திங்கள்கிழமை) பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இத்தகவலை வெளியிட்டார்.
"மத்திய அரசின் உதவியுடன் காவல் நிலையங்களைக் கணினி மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்மிகத்தில் உள்ளோர் தவறு செய்வதைத் தடுக்க கண்காணிக்க முடியாது. புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மோசடி நிதி நிறுவனங்கள் மீது புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். சைபர் கிரைம் நடவடிக்கை குறித்து டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்றாவது போலீஸ் கமிஷன் பரிந்துரைப்படி அனைத்துக் காவல் நிலையங்களும் 3 வகைகளாக பிரிக்கப்பட உள்ளன. அதன்படி மறுசீரமைப்பு செய்ய தற்போது கருத்துக் கேட்கப்படுகிறது. நகர் பகுதி போல, புறநகர் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தேவைப்படும் இடங்களில் நியமிக்கவும் பரிந்துரையில் திட்டமிடப்படுகிறது. தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினர் நியமிக்கப்படவுள்ளனர்.
அதற்காக மாநில அளவில் கூடுதலாக 20,000 காவல்துறையினர் தேவைப்படுவர். புனே குண்டு வெடிப்புக்குப் பிறகு முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பாதுகாப்புக்கு ஆயுதப்படைப் பிரிவினரில் சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள் ஈடுபடுத்தப்படுவர்" என்று டி.ஜி.பி லத்திகா சரண் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




