கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் திருட்டை கண்டுபிடித்து தடுக்க, கொள்ளையர்களை கண்டால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடலூர் காவல்துறை எஸ்.பி அஷ்வின் கோட்னீஸ், கூறினார்
கடலூர் கோண்டூரில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனை சாவடியை நேற்று மாலை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சமீப காலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாவட்டத்தில் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளதால், வேறு வழியில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க ஆறு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
முதல் கட்டமாக கடலூர், பண்ருட்டி சப்- டிவிஷன்களில் இரண்டு ஜீப், நான்கு மோட்டார் சைக்கிள்களில் காவல்துறையினர் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கியுடன் நகரின் உட்பகுதி மற்றும் 2 கி.மீ., சுற்றளவில் உட் பகுதிக்கு ரோந்து செல்வர்.இவர்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு, கொள்ளையர்களை கண்டால் சுட்டுப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.டி.எஸ்.பி.,க்கள் அலுவலகம் எண்கள். கடலூர் 04142-284355, சிதம்பரம் 04144-222257, விருத்தாசலம் 04143-238401, நெய்வேலி 04142-242022, சேத்தியாத்தோப்பு 04144-244341, பண்ருட்டி 04142-242022, திட்டக்குடி 04143-255211, காவல் கட்டுப்பாட்டு அறை 04142-284341 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு 04142-284333 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




