தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தைச் சோதனையிட வந்த அரசு அதிகாரிகளை அதிமுக கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்று அதிகாரிகள் திரும்ப வரும் முன், கட்சி அலுவலகத்தைப் பூட்டிச் சென்றனர்.
இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் உள்ளிட்ட பொருள்கள் தருமபுரி அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததையடுத்து, தருமபுரி கோட்டாட்சியர் மணிவண்ணன், தருமபுரி டி.எஸ்.பி. சாகுல் ஹமீது, வட்டாட்சியர் ராம துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்தை சோதனை செய்வதற்காக சென்றனர்.
அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளை அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை, நீதிமன்றத்திடமோ, ஆட்சியரிடமோ முறையாக அனுமதி பெற்று அலுவலகத்துக்குள் வருமாறு கோட்டாட்சியரிடம் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர்.
இந்நிலையில் மாலை 5 மணிக்கு கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து மக்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறும் போது, "பென்னாகரம் தொகுதியில்தான் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தருமபுரியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தை சோதனை செய்ய அதிகாரிகள் வந்துள்ளனர். இது முறையற்றது. மேலும் கட்சி அலுவலகத்தில் சோதனை செய்ய நீதிமன்றம் அல்லது மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
சோதனைச் சாவடிகளில் பாரபட்சமின்றி சோதனை நடப்பது உண்மையானால் அண்மையில் 4 சோதனைச் சாவடிகளைக் கடந்து 2 லாரிகளில் வேட்டி, சேலைகள் எப்படி சென்றன?" என்று அவர் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




