"உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும்" என்ற அர்த்தத்தில் "உலகில் அமைதியை நிலைநாட்டும் ஆயுதங்களே அணு ஆயுதங்கள்" என்று இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
மும்பையில் கடந்த வியாழக்கிழமை நடந்த அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசும் போது அவர் மேற்கண்டவாறு பேசியுள்ளார். மேலும், "ஒரு நாட்டிடம் அணு ஆயுதம் இருக்கும்போது அந்நாட்டின் மீது பிற நாடுகள் துணிந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயலாது. அணு ஆயுதத்தைக் கொண்டுள்ள நாட்டிடம் பிற நாடுகள் எப்போதும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும். இதனால் உலகில் இருநாடுகளிடையேயான தேவையற்ற மோதல் தவிர்க்கப்படுகிறது. அமைதி நிலைநாட்டப்படுகிறது. இதனால்தான் அணு ஆயுதங்களை அமைதி ஆயுதங்கள் என்று குறிப்பிடுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
"1974, 1998 ஆகிய இரு ஆண்டுகளில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்தச் சோதனையால் இந்தியாவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எத்தனையோ நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்தன. இத்தகைய பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் இந்தியா முன்பே அறிந்திருந்தது. எனினும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால்தான் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் இன்று உலகமே வியக்கும் அளவுக்கு இந்தியா புதுமை படைத்தும், மேம்பாடு அடைந்தும் உள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கைக்கும், பின்விளைவுக்கும் பயந்து அணுகுண்டு சோதனை நடத்துவதில் இருந்து நாம் பின்வாங்கியிருந்தால் இந்தத் தொழில்நுட்ப புரட்சி சாத்தியமாகியிருக்காது" என்றும் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




