மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடடய குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) வெளிநடப்பு செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் பூனாவிலுள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். பின்னர், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்து அவர்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது, "பூனா குண்டுவெடிப்பு குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதனை மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைப்பது சரியாக இருக்காது. அது தற்போதைய விசாரணையை மட்டம் தட்டுவது போலாகிவிடும்.
குற்றவாளிகளைப் பிடிப்பது தாமதமானாலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை சரியான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. தீவிரவாத தடுப்பு படையினர் 8 மாநிலங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். குஜராத், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலுள்ள தேசிய புலனாய்வு அமைப்பினரும் குற்றவாளிகள் குறித்த விசாரணைக்கு உதவியுள்ளனர்" என்று கூறினார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் முதலான சங்கபரிவார் அமைப்புகளே பூனா குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




