கலர் ஜெராக்ஸ் மெஷினில் கள்ள நோட்டு தயாரித்த போலீஸ்காரர் உள்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றியவர் சேகர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள காட்டுவிளையை சேர்ந்தவர்.
அதே கிராமத்தை சேர்ந்த துரைநாடார் மகன் ஐயப்பன். இவர் மரம் அச்சு வடிவமைக்கும் வேலை செய்து வந்தார். மரத்தில் செய்த டிசைன்களை நகல் எடுக்க வாங்கிய மெஷின் துல்லியமாக செயல்பட்டதை பார்த்து அதை வைத்து ரூபாய் நோட்டுக்களையும் அச்சு எடுத்து வந்துள்ளார்கள். பார்ப்பதற்கு அசல் ரூபாய் நோட்டு போலவே தெரிய, நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த நிலபுரோக்கர் ராபர்ட் மூலம் பிராந்திகடை கடைகளில் புழக்கத்தில் விட்டுள்ளார்கள்.ராபர்ட்டிடம் பணபுழக்கம் அதிகரித்ததால் சந்தேகமடைந்த அதே ஊரை சேர்ந்த ஒருவர், நெல்லை எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து பணக்குடியில் இவரை ரகசியமாக கண்காணித்த போலீசார், பேக்கரி ஒன்றில் இவர் கொடுத்த 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பதை ஊர்ஜிதப்படுத்தி அவரைக் கைதுசெய்தனர்.
காட்டுவிளையில் சேகருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பங்களா வீடு உள்ளது. சேகர் அங்கு தான் கடந்த சில மாதங்களாக மருத்துவ விடுப்பு எடுத்து கள்ளநோட்டு அச்சுப்பணிகளில் இறங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் இருந்து அறுபத்தி ஆறு 500 ரூபாய் நோட்டுக்களையும், நாற்பத்தி ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய நகல் எடுக்கும் கருவி, மை, காகிதங்கள், கட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இவர்கள் லட்சக்கணக்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்பதால் அவற்றை மீட்பது போலீஸ், வங்கித்துறையினருக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




