"2010-2011 க்கான தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள தமிழகத்தின் ஒட்டுமொத்த 3.23 சதவிகித நிதிப்பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை" என்று முதல்வர் கருணாநிதி அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்குப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"2009-2010 ஆம் ஆண்டு ரூ.1,024 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை என்பது 2009-2010 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டுத் தொகையாகும். 2009-2010 ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டின் படியான வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 5,020 கோடி தான். இந்த ரூ.5,020 கோடி வருவாய்ப் பற்றாக்குறை தான் தற்போது 2010-2011ல் ரூ.3,396 கோடியாக வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் குறைந்துள்ளதே தவிர, வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என்று ஜெயலலிதா கூறியிருப்பது தவறான புள்ளி விவரமாகும்.
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசின் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றாலும், உலகப் பொருளாதார மந்த நிலையால் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவாலும்தான் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையின் இணைப்புப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார தேக்க நிலையில் இருந்து மீள்வதற்காக மத்திய அரசு பல்வேறு வரிச்சலுகைகளை இந்த ஆண்டு அளித்தது. அதனால் அரசின் வருவாய் குறைந்ததும், பற்றாக்குறை அதிகமாக ஒரு முக்கியக் காரணமாகும். 2008-2009 ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று அறிவித்த மத்திய அரசு 2009-2010 ஆம் ஆண்டு 4 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது.
2009-2010 திருத்திய மதிப்பீட்டின்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை 3.23 சதவிகிதம்தான். எனவே இப்பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை. விலைவாசியைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் உணவு மானியமாக இந்த நிதிநிலை அறிக்கையிலே மட்டும் ரூ.3,750 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் தான். பொது விநியோகத் திட்டத்துக்கு அரசு தரும் பணம், இந்த மாநிலத்திலே உள்ள ஏழை எளிய மக்களுக்குத் தான் பயன்படுகிறது.
தேசிய நதிநீர் இணைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள் பற்றியெல்லாம், ஆளுநர் உரையிலேயே கூறப்பட்டுவிட்டது. அதைப் பார்க்காமல், நிதிநிலை அறிக்கையிலே இவைகள் இல்லை என்று கூறுவது தவறு. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று ஜெயலலிதா கூறியிருப்பது, ஏராளமான திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார் என்று தானே அர்த்தம். அதாவது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறார்.
நிலைகுலை பட்ஜெட் என ஜெயலலிதா கூறியிருப்பது, அவர் நிலைகுலைந்த நிலையில் தான் இருப்பதைப் பற்றி இவ்வாறு சொல்லிக் காட்டியிருக்கிறாரோ என்னவோ? 2009 -ம் ஆண்டு இறுதியில் தொடக்க கூட்டுறவு வங்கிகள் ரூ.8,534 கோடி அளவில் கடன்களை வழங்கியிருந்தன. எனவே கிராமங்களில் கூட்டுறவு வங்கிகள் இல்லாமல் விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்பது சரியல்ல" என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




