"மண்டல் கமிசன் பரிந்துரையால் அதிக பலனடைந்தது முஸ்லிம் சமுதாயம் தான். ஆகவே மக்களவை, சட்டப் பேரவைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் செய்தால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும். மசோதாவை மக்களவையில் பாஜக ஆதரிக்காது" என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
"மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் சமய அடிப்படையிலான உள்ஒதுக்கீட்டைப் புகுத்தாததையே அந்த மசோதாவின் பலமாக பாஜக நினைக்கிறது. இதனால்தான் தனது முழு ஆதரவையும் அந்த மசோதாவுக்கு அளித்து மாநிலங்களவையில் நிறைவேற ஒத்துழைத்தது.
இந்நிலையில் முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கும் விதத்தில் மசோதாவில் திருத்தத்தைக் கொண்டுவர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முலாயம் சிங், லாலு பிரசாத், சரத் யாதவ் ஆகிய மூவரிடமும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் உறுதி அளித்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம்.
முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சம்மதித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த அணுகுமுறையை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல. அவ்வாறெனில், மண்டல் கமிஷனின் பரிந்துரையைப் பாஜக ஆதரித்திருக்காது. மண்டல் கமிஷனின் பரிந்துரையால் அதிக பலன் அடைந்துள்ளது முஸ்லிம் சமுதாயம்தான்" என்று அந்தப் பேட்டியில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




