தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு காலகட்டம் வரை தனிக்கட்சி ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த நிலைமாறி, கடந்த தேர்தல்களில் உறுதியான கூட்டணி கட்சிகளுக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பை நாட்டு மக்கள் அளித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் காங்கிரஸ், திமுக என இரட்டை கட்சிகளின் ஆதிக்கம் இருந்தது. ஆனால் இன்று திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் எனப் பல கட்சிகள் தமிழக ஓட்டு வங்கியில் கணிசமான அளவைத் தங்கள் பக்கம் பிரித்து வைத்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது, அமையப் போகும் கூட்டணியினைப் பொறுத்து மாறும் என்ற நிலையே உள்ளது.
2011 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக நடந்து முடிந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை எடுத்துக் கொள்ளும் அளவுக்குப் பல அதிர்ச்சிகளை முன்னணி கட்சிகளுக்குத் தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். முக்கியமாக திமுகவுக்கு மாற்றாக நடிகர் எம்ஜி ராமச்சந்திரனால் உருவாக்கி வளர்த்து, அவரின் காலம் முடியும் வரை தமிழகத்தை ஆட்சி செய்த பெருமைக்குரிய அதிமுக, இந்த இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் ஓட்டு வங்கியைச் சரித்து திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கிய நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் டெபாசிட்டை இழந்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் கவனிக்கத் தக்க பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பது மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது மிகையில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வியைத் தழுவிய பாமக, பென்னாகரம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுகவையும் தேமுதிகவையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது பாமகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்களால் கருதப் படுகிறது.
காங்கிரஸுடன் கூட்டணி என்பதோடு ஓரளவு சிறந்த நிர்வாகத்திறனைக் காட்டி ஆட்சி செய்து கொண்டிருக்கும் பலத்தோடு களமிறங்கிய திமுகவின் வெற்றி என்பது முன்னரே முடிவு செய்யப் பட்ட ஒன்று தான். ஒரு காலம் வரை தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸின் நிலைமையோ, இன்று திமுக அல்லது அதிமுக என ஏதாவது ஒரு கட்சியின் மீது சவாரி செய்யும் நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் கால்பதிக்க அதிமுக, திமுக என பெரிய கட்சிகளுடன் மாறி மாறி ஒட்டி, ஓரளவு தமிழகத்தில் தன் வலிமையை வளர்த்துக் கொண்டுள்ள பாஜகவும் காங்கிரஸைப் போன்று இந்த இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற ஆலோசனையில் காய்களை நகர்த்தி வருகிறது.
ஆனால் நடந்து முடிந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல், மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதைக் காட்டுகிறது. 2001 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவால் சட்டமன்ற , நாடாளுமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெரிய வெற்றிகளை ஈட்ட முடியாதது கவனிக்கத்தக்கது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவின் வரவும் நிறைவான நிர்வாகத் திறமை குறைவோடு தனி ராஜாங்கம் நடத்தும் அதிமுகவின் தலைமை அணுகுமுறையும் அதிமுகவின் செல்வாக்கைச் சரித்துள்ளது என்றால் மிகையில்லை.
வேட்பாளர் தேர்வு, கூட்டணி விவகாரம் உட்பட முக்கிய முடிவுகள் அவசர கோலத்திலேயே எடுக்கப் படுவது அதிமுகவுக்குக் கைவந்த கலை. அதிமுக வேட்பாளர்களைப் பொறுத்தவரை வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாள் வரை எந்த உத்திரவாதமும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் போயஸ் தோட்டத்தில் இருந்து மாற்றம் அறிவிக்கப் படலாம்.
கட்சித் தலைமையின் முறையான அரவணைப்பு கிடைக்காத காரணத்தால் கட்சியின் ஆரம்ப கால விசுவாசிகள், தனிப் பட்ட செல்வாக்கு பெற்ற முக்கிய நிர்வாகிகள் என பலரும் அடுத்தடுத்து அதிமுகவை விட்டு திமுக கூடாரத்துக்குப் படையெடுத்து வருவதும் கட்சியை நிலைகுலைய செய்துள்ளது.
மேலும் அதிமுக, மக்களின் தேவை அறிந்து ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்பட தவறியதும் அதிமுக மேல் தமிழக மக்கள் நம்பிக்கை இழக்க ஒரு காரணம். கொடநாட்டில் இருந்து கொண்டு தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களை அறிவிப்பது மட்டுமே ஒரு நல்ல எதிர்க் கட்சிக்கு அழகல்ல.
இதற்கிடையில், நடந்து முடிந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் பதிவான ஒட்டுமொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டுகளையும் திமுக அல்லாத மற்ற அனைத்துக் கட்சிகளுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டுகளையும் கணக்கிட்டு, "திமுகவுக்குக் கிடைத்த ஓட்டுகளை விட அதற்கு எதிராக மற்ற கட்சிகளுக்கு விழுந்த ஓட்டுகளே அதிகம்; இதிலிருந்து பென்னாகரம் தொகுதியில் திமுகவுக்கு எதிராகவே அதிக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வியே அடைந்துள்ளது" என்று பாஜக தவறான வாதம் ஒன்றை வைக்கிறது.
பாமக, எதிர்கட்சியான அதிமுகவையே பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பெறுமளவுக்கு அதற்கு ஆதரவாக வாக்களித்த வாக்காளர்கள் திமுகவுக்கு எதிராக மட்டுமே வாக்களிக்கவில்லை. அதிமுக, தேமுதிக, பாஜக உட்பட மற்ற கட்சிகளுக்கு எதிராகவும்தான் வாக்களித்துள்ளனர். அதுபோலவே அதிமுக மற்றும் தேமுதிகவுக்கு வாக்களித்தவர்களும் பாமகவுக்கு எதிராகவும் தான் வாக்களித்துள்ளர் என்பது வசதியாக மறைக்கப்படுகிறது.
உண்மையில், இதுவரை இல்லாத அளவு 1 ரூபாய்க்கு அரிசி, பல இலவச திட்டங்கள், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, முதுநிலை பட்டதாரிகளுக்கு இலவச கல்விக்கட்டணம் என பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்பதை மறுக்க இயலாது. அதிகார பலம், பணபலம் இடைத்தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் அருகில் மக்களின் மனமே இறுதியான முடிவை நிர்ணயிக்கும். இதுவரையிலான திமுக அரசின் செயல்பாட்டில் தற்போதைய அறிவிக்கப்படாத மின்வெட்டும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் மட்டுமே குறிப்பிட்டுக் கூறும்படியாக சாதாரண ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களாகும். இதற்குச் சரியான மாற்று திட்டத்தை அடுத்தத் தேர்தலுக்கு முன்னர் திமுக அரசு முன்னெடுக்குமானால், அது 2011 தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் தன் இருப்பை உறுதியான நிலையில் தெளிவித்து விட்ட பாமக, 2011 தேர்தலில் மீண்டும் ஒரு சக்தியாகவே எழுந்து நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தற்போதைக்குத் திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாகவே கருதப் படுகிறது. இதே கூட்டணி அடுத்த சட்டசபை தேர்தலிலும் நீடித்தால், அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் என தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டால் மட்டுமே அந்தக் கூட்டணியை வீழ்த்த முடியும்.
ஆனால் அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை. அத்தோடு, காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளில் அதிமுகவும் இறங்கியுள்ளதைக் காங்கிரஸுடனான அதன் சமீபத்திய அணுகுமுறைகளில் காணமுடிகிறது. காங்கிரஸ் இடம் மாறுவதற்கேற்ப பாஜக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட்கள் தங்கள் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதற்குச் சாத்தியம் உள்ளது. 1960-கள் போன்று தமிழகத்தை ஆள வேண்டும் என்ற அவா காங்கிரஸுக்கும் இல்லாமல் இல்லை. ஆனால், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெல்வதற்கான சாத்தியம் அறவே இல்லை.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் இரு அணிகள் என்பது உறுதியாக உள்ள நிலையில் இக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயாராக காங்கிரஸ், பாமக, தேமுதிக, பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்களும் போட்டியிட்டால் பாஜக இருக்கும் இடத்தில் கம்யூனிஸ்ட்களும் முஸ்லிம் கட்சிகளும் இருக்கச் சாத்தியம் இல்லா நிலையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சிகள் மற்றும் தேமுதிக ஆகியவை இணைந்து மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியத்தையும் தள்ளிவிட முடியாது. அவ்வாறு ஒரு உறுதியான மூன்றாவது அணி அமையப்பெற்றால் 2011 தேர்தலிலேயே அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவற்றுக்கு இடையில் நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் தற்போது விஜய் என ஒரு நடிகர் பட்டாளம் விஜயகாந்தின் வரிசையில் தனிக்கட்சிகளுடன் கோதாவியில் இறங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். அத்துடன் இதுவரை "முஸ்லிம் லீக்" நாமத்தில் பல கூறாக முஸ்லிம்கள் ஓட்டைச் சிதறடித்து வந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் "மனித நேய மக்கள்" என்ற நாமத்தோடு மற்றொரு கட்சியும் உருவாகியுள்ளது. கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே கன்னி முயற்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துணிச்சலாக தனித்து நின்று கையைச் சுட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அத்தோடு முடங்கி விடாமல், நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் சூறாவழி பிரச்சாரம், பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் அக்கட்சியின் பக்கம் திரண்டுள்ள ஓட்டுகளையும் சாதாரணமாக தள்ளிவிடுவதற்கில்லை.
அவ்வாறானால், மூன்றாவது அணியுடன் ஒரு நான்காவது அணி உருவாகும் சாத்தியத்தையும் தள்ளிவிட முடியாது. எப்படியிருப்பினும் 2011 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடன்படிக்கை காட்சிகள் தமிழக மக்களுக்குச் சுவாரசியமான மசாலா படம் பார்த்தத் திருப்தியை வழங்கப்போவது நிச்சயம்.
எது எப்படியோ அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணிகள் கூட மாறலாம். நடக்கப்போகும் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின் ஒருவேளை உடனடியாக தேர்தலைக் கூட திமுக அறிவிக்கலாம். என்ன நடந்தாலும் சிறந்ததொரு ஆட்சி அமைந்து தமிழக மக்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

எழுதியவர்: மல்லிகை நேசன், April 11, 2010
எழுதியவர்: மறைமகன், April 11, 2010
எழுதியவர்: anbu, April 12, 2010
எழுதியவர்: prakash, April 12, 2010
எழுதியவர்: nanban, April 14, 2010
IF PMK PARTICIPATE IN OTHER SUB-ELECTION . THEY WILL ALSO LOST THEIR DEPOSIT,
PLS DON'T JUDGE A PARTY BY CASRE VOTE.
எழுதியவர்: வீர வன்னியன் ஆத்தூர், April 16, 2010
எழுதியவர்: m venkatesan, May 21, 2010
எழுதியவர்: j edison, May 30, 2010
எழுதியவர்: Indian, June 02, 2010
If they have thill come and nominate in Madurai & ThirunelVeli. They should not.
| < முந்தையது | அடுத்தது > |
|---|




