`நாங்க புதுசா' என்ற படத்தை தயாரித்து வருபவர் கண்ணன் என்ற தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்யாண ஓடையைச் சேர்ந்தவர். இவரே இந்த படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிக்கும் நோக்கத்தில் சென்னைக்கு வந்த இவர் மனைவி, குழந்தையுடன் நடிகர் வடிவேலுவின் வீட்டுக்கு எதிரில் வீடு வாடகைக்கு எடுத்து வசிக்கிறார்.
தற்போது இவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் "எனது மகள் அதிர்ஷ்டாவின் பிறந்தநாள் என் வீட்டில் கடந்த 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வெடி வெடித்து சிறப்பாக கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிக்காக எனது மாமனார் திராவிட செல்வம், மாமியார் காளியம்மாள், அக்காள் மற்றும் மைத்துனர் மருதுபாண்டியன் உட்பட உறவினர்கள் பலர் வந்திருந்தனர்.
`நாங்க புதுசா' படத்தில் நடிப்பவர்கள் மற்றும் நண்பர்கள் பலரையும் நான் அழைத்திருந்தேன். நடிகர் ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சிங்கமுத்து உட்பட பலர், பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டுச் சென்றனர். சிங்கமுத்து சுமார் 10 நிமிடங்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழா நடந்து கொண்டிருந்த போது விருகம்பாக்கம் போலீசார் வந்தனர். நாங்கள் இடைறு செய்வதாக வடிவேலு தரப்பில் புகார் செய்யப்பட்டது என்று போலீசார் கூறினர். இந்த நிலையில் 7-ந் தேதி மாலையில் 6 பேர் எனது வீட்டுக்கு வந்தனர். நாங்கள் தங்கி இருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும், ஏதாவது பிரச்சினை செய்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவோம் என்று மிரட்டினர்.
அதன் பிறகு 9-ந் தேதி மாலை 6 மணியளவில் கார் ஒன்றில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மீண்டும் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போதும் எங்களை அவர்கள் மிரட்டினர். எனவே விருகம்பாக்கம் போலீசுக்கு புகார் கொடுப்பதற்காக சென்றேன். பின்னர் மீண்டும் சிலர் கையில் தடியுடன் வந்தனர்.
போலீசுக்கு சென்று புகார் கொடுக்கிறாயா? என்று கேட்டனர். அப்போது அங்கு வந்த எனது மாமனார் திராவிட செல்வத்தை அவர்கள் உருட்டுக் கட்டையால் தாக்கினர். அப்போது நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வந்தனர். போலீசாரைக் கண்டதும் வன்முறையாளர்கள் ஓடினர். அவர்களில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
என்னை அவர்கள் மிரட்டியபோது, `எங்கள் தலைவர் வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்தை வளர்க்கிறாயா? வீட்டை உடனே காலி செய்ய வேண்டும். வடிவேலுக்கு எதிராக செயல்பட்டால் இங்கு இருக்க முடியாது' என்று குறிப்பிட்டனர்.
ஒரு நடிகர் என்ற முறையில் சிங்கமுத்தை எனது வீட்டுக்கு அழைத்திருந்தேன். மற்றபடி வடிவேலுவிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது வீட்டுக்குள் புகுந்து தாக்கியவர்கள் வடிவேலுவின் தூண்டுதலில் அடிப்படையில் வந்துள்ளனர் என்று தெரிகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




