வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் டோனி மற்றும் பத்ரிநாத் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாபை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. தரம்சாலாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. மார்ஷ் 57 பந்துகளில் 88 ரன்களும், பதான் 27 பந்துகளில் 44 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி கடைசி 8 ஓவரில் 99 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு பந்துகள் மீதமுள்ள நிலையில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ரெய்னா 46 ரன்களும், பத்ரிநாத் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் டோனி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் ஒரு பவுண்டரி மற்றும் இரு சிக்சர்கள் விளாசி அணியை அரை இறுதிக்கு வழிநடத்தி சென்றார் கேப்டன் டோனி.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




