இலங்கை: கொம்பனித்தெருவில் 80 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த குடும்பங்களை அரசாங்கம் போலிஸாரைக் கொண்டு பலவந்தமாக வெளியேற்றியது மனிதாபிமானமற்ற செயல் என்று கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, "குரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொள்கை இதுதானா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
அப்பகுதியில் வெளியேற்றப்பட்ட குடும்பங்களை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிகருணா நாயக்க, சுஜீவசேரசிங்க உட்பட பலர் சந்தித்து கலந்துரையாடியதுடன் அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்தது.
இது தொடர்பாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையில் கூறியதாவது;
கொம்பனித் தெருவில் 23 வீடுகளிலிருந்து மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அந்தக்கட்டிடங்கள் புல்டோசர் கொண்டு உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. போலிஸாரால் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். சிறுபிள்ளைகளும் முதியோர்களும் கர்ப்பிணிப்பெண்களும் கூட போலிஸாரால் இழுத்து விரட்டப்பட்டுள்ளனர். சர்வாதிகார ஆட்சியில் கூட இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதில்லை.
இவ்வீடுகள் தொடர்பான சட்டப்பிரச்சினை குறித்து நாம் பேசமுற்படவில்லை. மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரும் குடும்பங்களை விரட்டியமை மனிதாபிமானதல்ல. ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என அவர் கண்டனம் தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




