நடிகர் விஜய் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ. 30 கோடி வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 35 சதவீதம் தொகையை நடிகர் விஜய் திருப்பித் தரவேண்டும் என்றும் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் கோரி உள்ளனர்.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அண்ணாமலை மற்றும் செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் திரையரங்ககுகள் பெரும் பாதிப்பை அடைந்து வருகின்றன. 2,300க்கும் அதிகமாக இருந்த திரையரங்குகள் தற்போது பாதியாகக் குறைந்துவிட்டது. 2010ஆம் ஆண்டில் வெளியான எந்தப் படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம் மற்றும் அங்காடித் தெரு ஆகிய படங்கள் மூலம் மட்டுமே லாபம் கிடைத்தது என்று கூறினர்.
விஜய் நடித்த ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன் என தொடர்ந்து 5 படங்களிலும் பெரும் நட்டத்தை அடைந்தோம். முதல் படத்தில் ஏற்பட்ட நட்டத்தை அடுத்த படத்திலாவது சரி செய்யலாம் என்ற ஆசையில்தான் அடுத்த படத்தை வாங்கினோம். இதுபோலவே விஜயின் சொந்த தயாரிப்பு மற்றும் அவரது 50ஆவது படம். எனவே விஜய் இதில் வித்தியாசமாக நடித்திருப்பார் என்ற நம்பிக்கையில் சுறா படத்தை வாங்கினோம். இப்போது பெரிய அளவில் நட்டம் அடைந்திருக்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.
ஏற்கனவே ரஜினி, கமல் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோரின் படங்களால் நாங்கள் நட்டம் அடைந்தபோது, அவர்கள் மனிதாபிமான முறையில் நட்டத்தை சரி செய்தார்கள். அதுபோல விஜயும் நட்டத்தை சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். விஜய் இதற்கு மறுத்துவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜூன் மாதம் கூடும் எங்கள் சங்கம் முடிவு செய்யும் என்றும் அவர்கள் கூறினர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




