திருச்சி, மதுரை உள்பட நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 35 விமான நிலையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தவும், நவீனமயமாக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதைத் தொடர்ந்து அந்தப் பணிகளை விமான போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மதுரை, திருச்சி, விசாகப்பட்டினம், குவகாத்தி, ராய்பூர், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஞ்சி, திருவனந்தபுரம், மங்களூர், அவுரங்காபாத், போபால், இந்தூர், கஜுராஹோ, திமாபூர், புவனேஸ்வர், அமிர்தசரஸ், ஜெய்பூர், உதய்பூர், அகர்தலா, லக்னோ, வாரணாசி, டெரோடூன் ஆகிய 24 விமான நிலையங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோரும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி நகர்ப்புற வர்த்தக வளாகங்கள் அமைத்தல், கார்கள் நிறுத்தும் இடம் மற்றும் சரக்குகள் கையாளும் வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமாக உள்ள நிலங்களை கண்டறிந்து அவற்றை குத்தகைக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் உணவகங்கள் மற்றும் ஷோ ரூம்கள் அமைத்து வாடகைக்கு விடுதல், விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலமும் வருவாயை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான யுக்திகளை உருவாக்குவதற்கு ஆலோசனைகள் வழங்க நிறுவனம் ஒன்றை ஈடுபடுத்தவும் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




