சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி தமிழ் நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரும் போராட்டம் தமிழகமெங்கும் பரவியுள்ளது. சென்னையில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன. தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கும் முதற்கட்ட முயற்சியாக தமிழ் அறிந்த நீதிபதிகள் முன்பாக முதலில் தமிழால் விசாரணை நடத்தலாம் எனப் போராட்டக் குழுவினர் இந்நேரம் செய்தியாளரிடம் பேசியபோது தெரிவித்தனர்.
இதனிடையே இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாமக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் நாள் நெருங்கி வரும் வேளையில் தமிழுக்கான போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




