இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மனம் மகிழுங்கள்-4

E-mail அச்செடுக்க

பொதுவாய் மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும்.

ஒன்று ஆக்கபூர்வமானது (positive),

மற்றொன்று எதிர்மறையானது (negative).

இவை இரண்டும் அடிப்படையான மனித குணங்கள். இவை, நாம் போகிற போக்கில் ‘நானும் வரட்டுமா?’ என்று வந்து சேர்ந்து கொண்டவை இல்லை. மாறாய், மனிதன் பிறந்ததலிருந்தே அவை அவனுள் உருவாகி, வடிவாகி, நிலைபெறுகின்றன.

பிறகு?

அவை விடாப்பிடியாக அவனுடன் ஒட்டிக் கொள்கின்றன. அவனிடமிருந்து போக மறுக்கின்றன.

மனிதன் பிறந்ததிலிருந்தே என்பது ஒரு பேச்சுக்கு சொன்னதில்லை. உண்மையிலேயே அவன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து தான்.

எப்படி?

ஒரு விளக்கம் சொல்கிறார்கள்…

பிறந்த குழந்தையின் முதல் தகவல் பரிமாற்றம், ‘அன்பார்ந்த அம்மா, அப்பாவே!’ என்று ஆரம்பிப்பதில்லை.

அழுகை!

பசியா? அழுகை!

தாகமா? கத்தி அழுகை!

அப்படி ஆரம்பித்து, ‘சூச்சா, மூச்சா’ போய் ஈரமாய் இருந்தால், பொம்மை வேண்டும் என்றால், ச்சும்மா போரடிக்குது, எரிச்சலாக இருக்கிறது என்றால், அடாசு சீரியலை விட்டு அம்மா எழுந்து வரவேண்டும் என்றால்... அனைத்திற்கும் அழுகை.

கைக்குழந்தை அழுதால், அம்மாக்களுக்கு முதலில் தோன்றுவது, ‘அச்சோ! குழந்தை பசியால் கத்துது பார்!’ அதனால், உடனே பால் புகட்டப்படும். அதிலும் அழுகை அடங்கவில்லை என்றால் தான், பாட்டிகள் சொல்லலாம், “கொஞ்சம் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடேன்; நீ கொழந்தையா இருக்கச்சே நானும் அதத்தாங்கொடுத்தேன்”.

ஆக, குழந்தையுடன் முதல் பதில் தகவல் பரிமாற்றம், பால், உணவு, தின்பண்டம். மற்ற நேரத்திற்கு வாயில் ‘நிப்பிள்’! சிறு வயதிலிருந்தே இப்படி உணவை ஊட்டி வளர்க்கும் பழக்கம் தான், பின்னர் சிலருக்கு வளர்ந்தபின் அதிகமாய் உணவு உண்ணும் வழக்கமாய் ஆகிவிடுகிறது என்கிறார்கள். நம்ப முடிகிறதா?

நானறிந்த வரையில் சிலருக்கு உணவு வகையைப் பொறுத்து வயிற்றின் கொள்ளளவு மாறுபடுவதை கண்டிருக்கிறேன். சிலருக்கு இடியாப்பம், பாயா, சிலருக்கு பிரியாணி! வேறு சிலருக்கோ அயிரை மீன் குழம்பு என்று எழுதிக் காண்பித்தாலே போதும். அவையெல்லாம் ஒருவர் வளர வளர, நா உண்டுணர்ந்து, மனம் பகுத்துணர்ந்து பரிணாமம் அடைந்ததாய் இருக்கலாம்.

மனோவியலாளர்கள் சொல்கிறார்கள், ‘பொதுவாய்க் குழந்தைப் பருவத்தில் அழுகையை நிறுத்தப் பாலும், உணவும் ஊட்டப்பட்டு வளர்த்ததால் சிலருக்குப் பிற்காலத்தில் அவர்களுடைய எரிச்சல், தனிமை, மன அழுத்தம் ஆகியனவற்றுக்குப் பரிகாரத்தை மது பாட்டிலிலும் சிகரெட்டிலும் காண மனம் உந்துகிறது’ என்று.

அடுத்து,

ஒருவருடைய நிகழ்காலக் குணாதிசயம் என்பது அவருடைய குழந்தைப் பருவ அனுபவங்களின் அடிப்படையைக் கொண்டே வடிவம் கொள்கிறது என்கிறார்கள். குழந்தைகளுக்கு இருப்பதெல்லாம் ‘திறந்த மனது’, ‘காலியான மூளை’. தவறாய் விளங்கிக் கொள்ளக்கூடாது. க்ளீன் சிலேட்போல என்று பொருள். குழந்தைகளுக்கு எவ்விதமான முன் தீர்மானங்களும் இருப்பதில்லை என்பதைத் தான் அப்படி விவரிக்கிறார்கள். நாம் பிஞ்சு மனம் என்கிறோமே அது! நஞ்சு கலக்ககாத பிஞ்சு மனம்! ஆனால் அது படு கூர்மையானது. பஞ்சு நீரை உறிஞ்சுவதைப் போல் அது விஷயத்தைச் சடுதியில் பிடித்துக் கொள்ளும்.

டிவியில் லேட்டஸ்ட் ஹிட் பாட்டுக்கு, நடிகை துக்கடா டிரெஸ்ஸுடன் இடுப்பொடித்து ஆடும் டான்ஸைப் பார்த்துவிட்டு, குட்டி ஜட்டியுடன் குழந்தை ‘தத்தக்கா பித்தக்கா’ என்று பாடி ஆடும்போது பெற்றோர்களுக்கு வாயெல்லாம் பல். போதாததற்கு வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் முன்னிலயிலும் மகளை ஆடவிட்டுப் புளங்காகிதம்தான். அதே குழந்தை வளர்ந்தபின், அதே நடிகைகளைப் போல், ஜட்டியை விட ஒரு இன்ச் பெரிய குட்டைப் பாவடையுடன் காலேஜ், ஷாப்பிங் என்று போக ஆரம்பிக்கும் போதுதான், ‘என்ன ஃபேஷன் கர்மம் இது?’ என்று தலையில் அடித்தக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

அதற்கடுத்து -

சிறு வயதில் பெற்றோர்களுடன் ஏற்படும் உறவு தான், ஒருவர் வளர்ந்ததும் அவர் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை, பிறருடனான உறவு ஆகியவற்றுக்கு அடித்தளமாய் அமைகிறது. பாதி அவர் அறிந்து; பாதி அவர் அறியாமலேயே!

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனால் தன் பெற்றோர் போல் குணாதிசயம் கொண்ட மனிதர்களுடன் இயல்பாய் உறவு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறதாம். தன் அப்பாவைப் போல் அக்கறையான கணவன் அமைய வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவதும் தன் தாயைப் போல் பாசமான மனைவி அமைய வேண்டும் என்று ஆண் எண்ணுவதும் இதன் அடிப்படையில் தான் என்கிறார்கள்.

மற்றோருடன் அன்பாய்ப்ப் பேசி, நட்புறவு கொள்பவர்களாய்ப் பெற்றோர் இருந்தால், பிள்ளைகளுக்கும் அந்த குணம் வந்து அமைகிறது. வசவுச் சொல்லே செந்தமிழாய்ப் பேசும் பெற்றோரைக் கண்டு வளரும் வாரிசும் அப்படியே!

சென்னையில் பேட்டையில் வாழும் சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள் – ‘ஆத்தா’ எனும் ‘தாய்’ சொல், கெட்டு குட்டிச்சுவராகியிருக்கும்.

எதற்கெடுத்தாலும் குழந்தைகளைத் திட்டி, குற்றம் சொல்லி, ‘நீ உருப்படாமத் தான் போகப் போறே போ!’ என்று பெற்றோர்கள் வளரும் குழந்தைகளுக்கு நல்லாசி வழங்கியவாறு இருந்தால், அந்தப் பிள்ளைகள் பூரண சுயசிந்தனையுடன் தங்களை உருப்படாமல் ஆக்க உதவும் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதற்கு மாறாய், அன்பும், நற்சொல்லும் கேட்டு வளரும் சிறுவர்கள் இயல்பாகவே நல்லொழுக்கம் படர்ந்தவர்களாய் வளர்கிறார்கள். அத்தகையோருடன் உறவும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

எங்கும் எதிலும் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் இதுதான் பொது நியதி!

மனதின் வடிவமைப்பு, அதன் பல அம்சங்கள் என்று இங்கு இதுவரை கண்டதெல்லாம் மேலெழுந்த சமாச்சாரங்களே. பிரச்சனைகளைப் புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சனை தீர்ந்தது போல் தானே! ஆகவே நாம் எந்தவகை என்று தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம். அல்லது...

மேலும் திருத்திக் கொள்ளலாம்.

மன மகிழ்விற்கு முதல் கட்டமாய் மனதார ஒன்றை நம்ப வேண்டும். இதுவரை நாம் பார்த்ததில் அது மிக முக்கியம்.

என்ன அது?

விடாப்பிடியாய்த் தொடரும் எந்தக் கெட்ட குணத்தையும் நம்மால் வெல்ல முடியும்!

ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும்; . நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தமது செயல்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தடை வரும். உடைத்தெறியப்பட வேண்டிய தடைகள்!

தாண்டினால்?

உள்ளுக்குள் எங்காவது பல்பு எரியும்! நெஞ்சுக்குள் எங்காவது மணி அடிக்கும்! மனதில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும்! புத்துணர்வு உள் நுழையும்!

அப்படியானதும், அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேம்படுத்தி வளர்த்துக் கொள்ளச் சான்றோர்களுடன் உறவு ஏற்படு்த்திக் கொள்ளச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

நான் நமது அரசியல்வாதிகளின் அறிக்கைகளைப் படிக்காமல் இருக்க உபதேசிப்பேன்.



னம் மகிழ, தொடருவோம்...

 

“சும்மா நாலு தும்மல் தும்மினாலும், என்ன தான் பயமோ ? உடனே டாக்டரிடம் ஓடுகிறார்கள். நான் சின்ன வயசில தடுப்பூசிக்காகப் போனதுடன் சரி; அப்புறம் இத்தனை வருஷமாச்சு --. டாக்டர் வீட்டு அட்ரஸ் கூடத் தெரியாது எனக்கு.”

கேட்டிருக்கிறீர்களா இதை? அல்லது எப்பொழுதாவது யாராவது எங்காவது பத்திரிகைப் பேட்டிகளில் இப்படிச் சொன்னதைப் படித்துள்ளீர்களா?

”இருந்தாலும் ரொம்ப ஓவர் அலட்டல் இது,” என்று அப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். அவர்கள் மிகைப்படுத்திப் பேசுவதாகவும் எண்ணியிருந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் சிலருக்கு அப்படி ஒரு பாக்கியம் அமைவதுண்டு.

எப்படி சாத்தியம்?

சாதிப்பது மனதுதானாம்!

அதாவது, அவரது மனதின் பாஸிட்டிவ் வடிவமைப்பாம். அது ஆக்க சிந்தனையுள்ள மனது. அதற்காக அவர்களை, சிக்கன் குன்யா, swine flu வைரஸ்களெல்லாம் வெறுத்து ஒதுக்கி ஓடும் என்பது அர்த்தமில்லை. யதேச்சையாய்த் தாக்கும் சில்லறை நோய்களிலிருந்து வலிமையான மனது நம்மைக் காக்கும் என்கிறார்கள்.

இது ஒன்று!

ஆச்சா?

அடுத்தது, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவது.

அது என்னவாம்?

பிடித்த நடிகரின் படம் வெளியான முதல் நாள். தியேட்டர் ஹவுஸ் ஃபுல். லஞ்ச லாவண்யத்தைச் சகட்டு மேனிக்குத் திட்டி ”உருப்படுமா இந்த நாடு” என்று பொருமும் மகா அக்கறையுள்ள சிட்டிசன், கள்ள மார்க்கெட் டிக்கெட்டாவது கிடைக்காதா என்று பரபரப்பாய் அலைந்து கொண்டிருப்பார். அப்பொழுது தான் இவர் பக்கத்தில் அசால்ட்டாய் அவன் வந்து பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, வேகமாய் அவனை நெருங்குவார் இன்னொருவர். “ஸார் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்று இருக்கிறது வேண்டுமா?”

இவர் காதில் அது விழுந்து, சுதாரிப்பதற்குள், படம் ஆரம்பிக்கப்போகும் அவசரத்தில் அந்த இருவரும் போயே போயிருப்பார்கள். சிலர், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவதையும் ஆக்க சிந்தனையுள்ள மன வடிவமைப்பு என்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாழ்க்கையில் அப்படி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

வேறு சிலர் உள்ளனர். தொட்டதெல்லாம் பொன்னாய்த் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பலர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். மனோவியலாளர்களோ, ”பிலீவ் மீ. அதுவும் பாஸிட்டிவ் வடிவமைப்பு” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

சில வருடங்களுக்குமுன் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பலர் திடீரென்று லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகிவிட்டார்கள். உபயம் ஐ.டி. என்றார்கள்; சாஃப்ட்வேர் என்றார்கள். இது பொதுவாய்ப் பலருக்கு ஒரே நேரத்தில் நிகழும் விதி. அது வேறு.

இந்தச் சிலர் யாரென்றால், ”மனுஷன் குடியிருப்பானா அந்தக் காட்டிலே” என்று நாம் நினைக்கும் ஓர் அத்துவானப் புறநகரில் என்னவோ நினைத்து மனை வாங்கியிருப்பர் ஞான திருஷ்டியெல்லாம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் சரியாக அந்தப் பகுதியில் வந்து சேரும் வெளிநாட்டுக் கார் கம்பெனி ஒன்று சில ஆயிரம் ரூபாய்களில் வாங்கப்பெற்ற மனைகளை இலட்சங்களில் விலைபேசி வாங்கி, மனைக்குச் சொந்தக்காரர்களை ஓவர் நைட்டில் லட்சாதிபதியாக்கிவிடும்.

அடுத்து, பெரிய நிர்வாக இயல் பட்டமோ அதில் நிபுணத்துவமோ இல்லாத சிலருக்கு, எளிமையான ஓர் இயல்பு இருக்கும். வெளுத்ததெல்லாம் பால் என்பது போல் எல்லோரையும் நம்புவார்கள். மனதில் விகல்பம் ஏதுமில்லாமல் பழகக் கூடியவர்களாய் இருப்பார்கள். எதைச் செய்தாலும் எளிதாய் எடுத்துக் கொண்டு, இனிமையாய்க் காரியமாற்றும் மன வடிவமைப்பு அவர்களுக்கு இருக்கும்.

எதிர்வினை?

அவர்களிடம் பாசம் கொண்ட, எப்பொழுதும் நல்லவிதமாய் அவர்களுடன் பழகும் நண்பர் கூட்டம் ஒன்று விரிவடையும். அவர்களுக்கு உதவ அந்த நட்பு வட்டம் எப்பொழுதுமே ஆர்வமாயிருக்கும். அந்த நட்பு வட்டத்திடம் தமக்கு வேண்டிய உதவிகளை கோரிப் பெறுவது இவர்களுக்கு எளிதாகவே இருக்கும்.

”வெரி நைஸ். கேட்க நல்லாயிருக்கு. இதைப்போல நல்ல ஆக்கபூர்வ வடிவமைப்புகள் என் மனதிலும் ஏற்பட வேண்டும். மாடல் ஆர்டர் செய்தால் எங்காவது கிடைக்குமா?” என்று நெகடிவ்வாளர்கள் யோசிக்கலாம். ”பிறக்கும் போதே கூடப் பிறந்த குணம் சார். அதெல்லாம் நீரைப் பீய்ச்சி அடித்தாலும் போகாது” என்று அவர்களில் வேறு சிலர் சலித்துக் கொள்ளலாம்.

“அப்படியெல்லாம் இல்லை. நாம் மாறினால் நம் வாழ்க்கையும் மாறும்” என்று மனவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏனாம்?

அதுதான் இயற்கையின் நியதி. பிறக்கும் போதே உடன் பிறந்ததை அப்படி எளிதாய் மாற்றி விட முடியுமா என்ன? எளிதல்ல; ஆனால் சாத்தியம். நிச்சயமாய் சாத்தியம்.

“எப்படி? பிரச்சனையே இல்லையா?”

உண்டு. அதில் பிரச்சனை உண்டு!

தடை!

மாற வேண்டும் என்று நினைக்கும் போதுதான் தடை ஒன்று ஏற்படும். மாற்றம் எளிதாய் நிகழவிடாது அந்தத் தடை தடுக்கும். அது நியதி.

“தொந்தி, தொப்பை, மேல் மூச்சு, கீழ் மூச்செல்லாம் வாங்குகிறது. என்னவோ சிக்ஸ் பேக்காமே அதெல்லாம் வேண்டாம், குனிந்து கால் விரலைப் பார்க்க முடிந்தால் உத்தமம். அப்பொழுதாவது மனைவி, ஏதேனும் கொஞ்சம் காதல் பார்வை பார்க்கக் கூடும்“ என்று ஆசை ஏற்பட, பலநாள் மனப் போராட்டத்திற்குப் பிறகு டயட் முடிவிற்கு வந்திருப்பீர்கள். அந்த வாரம் தான் நெருங்கிய உறவின் திருமணமும் நாலைந்து நாள் வைபவமுமாக ஆடு, கோழியெல்லாம் பலவிதத்தில் வடிவமைக்கப்பட்ட உணவு, பிரியாணி, நெய் ஊறும் பலகாரம் (சைவ உணவாளர்கள் பிஸி பேளா பாத்திலிருந்து குலாப்ஜாமூன் வரை கற்பனை செய்து கொள்ளவும்) என்று உங்கள் முன் தோன்ற……. உங்களது தீர்மானம் காரியக் கமிட்டி கூட்டமெல்லாம் இல்லாமல் தள்ளி வைக்கப்படும்.

ஒருவழியாய் அது முடிந்தால் அடுத்த வாரம் உங்கள் தெருமுனையில் சுத்தமான, சுகாதாரமான பேக்கரி தொடங்கப்படும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது, மணக்கும் சமூசாவும் பக்கோடாவும் இன்ன பிறவும் உங்கள் தீர்மானத்தைத் தள்ளிப் போட வைக்கும். அதற்கடுத்த வாரம் திடீரென ஒரு வேலை நிமித்தம் மனைவி ஊருக்குக் கிளம்பிப் போக நேரிட………. எந்த ஹோட்டலில் டயட் மீல்ஸ் போடுகிறார்கள்? இப்படியே ஏதோவொரு தடை ஏற்பட்டு, ஏற்பட்டு, டயட் தீர்மானம் என்பது காவிரி ஆணையத் தீர்ப்பாக மாறிவிட்டிருக்கும்.

மாற்றம் நிகழத் தடை இப்படித்தான்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீராய் இறைந்து விரயமாகிறதே! இந்த மாதம் எப்படியாவது ஒரு தொகையைச் சேமித்து விடவேண்டும் என்று அந்தப் பெண் மேனேஜர் தீர்மானித்து, “இந்த மாதம் புதுப் புடவை, புதுச் செருப்பு, புது லிப்ஸ்டிக், எல்லாவற்றி்ற்கும் நோ!“ என்று அப்படி இப்படி பணம் சேமித்து வைக்கும் போதுதான் அந்தப் படுகோர விபத்து நிகழும். படு பத்திரமாய் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அவரது ஸ்கூட்டியை இடுத்துத் தள்ளிவிட்டு போயிருப்பான் ஆட்டோக்காரன். இன்ஷுரன்ஸும் இல்லை. மெக்கானிக் பார்த்து விட்டு, ரிப்பேருக்கு அளித்த எஸ்டிமேட் அவரது அந்த மாதச் சேமிப்பையெல்லாம் தாண்டியிருக்கும்! இதில் அவர் பிழை என்ன? ஒன்றும் இல்லை. மாற்றம் நிகழத் தடை, அவ்வளவே!

அங்கே அப்படியென்றால், மற்றொரு குடும்பத்தில் நிகழ்ந்தது என்ன? அங்கே மனைவிக்கு எப்பொழுதுமே குறை.

“உங்களை என்ன ஹீரோ மாதிரியா டிரெஸ் பண்ணிக்கச் சொல்றேன்? கொஞ்சம் மேட்சா, ஷர்ட், கொஞ்சம் அழகான ஷு, ஒரு நல்ல சலூன் விஸிட், அப்படின்னு நாசூக்கா, டீஸென்ட்டா இருக்கச் சொல்றேன்.” எனக் கணவனிடம் முறையிட,

“எல்லாம் இது போதும். இந்த வயசில என்னத்தை ஸ்டைல்?”

“ஸ்டைலைப் பற்றி யாரு சொன்னது? இப்படி ஏனோ தானோன்னு போட்டுக்காம இருந்தா பத்தாது.”

மனைவி மற்றும் பிள்ளைகளின், அங்கலாய்ப்பு, அன்புத் தொல்லை தாங்காமல் அன்று மேட்சாய் டிரஸ் தெரிந்தெடுத்து, அக்கறையாய் அயர்ன் செய்து அணிந்து தெருவில் இறங்கினார் அவர். பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது அது தோன்றியது. அவசர அவசரமாய் வீட்டிற்குள் வந்து பார்த்தால்…….. சந்தேகமேயில்லை, பேண்ட் பின்னால் தையல் பிரிந்திருந்தது. “எனக்கு இதெல்லாம் சரிப்படாது. அப்போதே சொன்னேனே கேட்டியா?” என்ற இரைச்சல் கேட்டு ஓடிவந்தார் மனைவி.

என்ன பெரிய பிரச்சனை இங்கு?

மாறாதே நீ! அது உனக்கு ஒத்துவராது என்று தடை!

நிகழும்! இப்படியெல்லாம், அல்லது இப்படி ஏதாவது, நிகழும்.

ஆனால் நமக்கு சரிப்படாது என்று பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதோ, முயற்சிகளை கைவிடுவதோ கூடாது.

உணர வேண்டும்!

என்னவென்று?

மாற்றம் எதிர்ப்புக்கு உட்பட்டது என்பதை உணர வேண்டும்.

எனவே மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: Geetha, July 03, 2010
கட்டுரை, நிறைய எதிர்பார்ப்புகளையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்